பணி நியமன புதிய கொள்கை அடுத்த பட்ஜெட்டில் அறிமுகம்: மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவிப்பு
கொல்கத்தா: கடந்த திரிணமூல் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின் போது பணி நியமனத்தில் நடந்த ஊழல்களால் மேற்கு வங்கத்துக்கு அவப்பெயர் ஏற்பட்டது. எனவே, அடுத்த பட்ஜெட் தொடரில் புதிய பணி நியமனக் கொள்கை அறிவிக்கப்படும் என்று முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ரோஜ்கர் மேளாவின் போது பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு ஆணைகளை முதல்வர் சுவேந்து அதிகாரி வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது: இதற்கு முன்பு திரிணமூல் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின் போது பணி நியமனங்கள் செய்வதில் முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. அதனால் மேற்கு வங்கத்துக்கு அவப்பெயர் ஏற்பட்டது.
பள்ளிகளில் 26 ஆயிரம் ஆசிரியர்களை நியமித்ததில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது என்று கொல்கத்தா உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தலையிட்டன. இதனால் பணி நியமனம் செய்யப்பட்ட 26 ஆயிரம் பள்ளி ஆசிரியர்களின் பதவி ரத்து செய்யப்பட்டது. இதனால் மேற்கு வங்க அரசுக்கு மிகப்பெரிய தலைக்குனிவு ஏற்பட்டது.
இந்த அவப்பெயரில் இருந்து மாநிலத்தை வெளியே கொண்டு வர முயற்சிக்கிறேன். வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் பணி நியமனத்துக்காக புதிய கொள்கை அறிமுகம் செய்யப்படும். முந்தைய ஆட்சிக் காலத்தில் அரசுக்கு ஏற்பட்ட அவப்பெயரை நீக்க விரும்புகிறோம். மக்களுக்கு நெருக்கமான, விருப்பமான அரசாக இருக்க விரும்புகிறோம். மேற்கு வங்கத்திலுள்ள தேர்வு மையங்கள் கறைபட்டுள்ளன. மோசமான தேர்வு மையங்கள் என்று பெயர் ஏற்பட்டதன் காரணமாக கிழக்கு ரயில்வே, தென் கிழக்கு ரயில்வே, வட கிழக்கு எல்லை ரயில்வே மண்டலங்கள் கூட, மேற்கு வங்கத்தில் தங்களது தேர்வு மையங்களை அமைப்பதில்லை. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அரசு பணிகளுக்காகப் பிஹார், அசாம், ஒடிசா மாநிலத்தில் தேர்வுகளை எழுதி வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் தற்போது நியமன முறையின் போது, தேர்வுகளில் நேர்காணல் தேர்வு மூலம் அதிக மதிப்பெண் வழங்கப்படுகிறது. அது சரியல்ல. நேர்காணல் தேர்வு குறைந்த அளவு மதிப்பெண் கொண்டதாக இருக்க வேண்டும்.
முன்பு இருந்த திரிணமூல் காங்கிரஸ் அரசு ஓபிசி, எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளி, பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான (இடபிள்யூஎஸ்) இடஒதுக்கீடுகளை கூட முறையாக வழங்கவில்லை. அந்த இடஒதுக்கீடுகளை புறக்கணித்து தன் இஷ்டத்துக்கு திரிணமூல் அரசு செயல்பட்டு வந்தது.
அவை அனைத்தையும் நாங்கள் மாற்றப் போகிறோம். சட்டப்படியான இடஒதுக்கீடுகள் இனி வழங்கப்படும். வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இதற்கான புதிய கொள்கை அறிமுகம் செய்யப்படவுள்ளது. வெளிப்படையான தேர்வுகள், முறையான விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறும். இவ்வாறு அவர் பேசினார்.