உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்; அதிர்ந்து போன பாஜக வேட்பாளர்
ராஜஸ்தான் மாநிலத்தில், மொத்தமுள்ள 309 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 10,245 கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல், கடந்த செப்டம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் நேற்று (14-09-26) அறிவிக்கப்பட்டன.
அதில், பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, டித்வானா-குசமான் மாவட்டம், பர்பத்சர் நகராட்சியில் உள்ள 13 வது வார்டில் பாஜக சார்பில் கைலாஷ் சந்த் என்பவர் போட்டியிட்டார். அவருக்கு, அந்த வார்டில் மொத்தமாக ஒரு வாக்கு மட்டுமே விழுந்துள்ளது. இது பாஜகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் ஹினா கானம் 376 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். அந்த நகராட்சியில் மொத்தமுள்ள 25 வார்டுகளில் காங்கிரஸ் 13 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், ஒரு வாக்கு மட்டுமே பெற்றிருப்பது குறித்துப் பேசிய பாஜக வேட்பாளர், “நான் 12 வது வார்டை சேர்ந்தவன். எனக்கு அங்கு தான் வாக்குகள் உள்ளன. கட்சித் தலைமையின் தவறான வேட்பாளர் தேர்வால் நான் இந்த வார்டில் போட்டியிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
அதே போல, நகெளா் மாவட்டம் ரியான்பாரி நகராட்சியின் 15-ஆவது வாா்டில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மஜீத் முகம்மதுக்கு ஒரு வாக்கு மட்டுமே கிடைத்தது. பாஜக வேட்பாளர் சுனில் குமாா் செளஹான் அங்கு வெற்றி பெற்றுள்ளார்.
இதனிடையே, சிந்திரி நகராட்சியில் உள்ள 3-ஆவது வாா்டில் போட்டியிட்ட ராஷ்ட்ரீய லோக் தளம் வேட்பாளர் ஓம் பிரகாஷுக்கு ஒரு வாக்கு கூட கிடைக்கவில்லை. இதனால், அவர் அதிர்ச்சியடைந்தார். தன்னுடைய வாக்கும், தனது குடும்பத்தினரின் வாக்குகளும் மாயமானது குறித்து, அவர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தலில் அரங்கேறியுள்ள இத்தகைய சம்பவங்கள் அரசியல் கட்சிகளிடையே பெரும் குழப்பத்தையும், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அதே போல, வேட்பாளர் தனது வாக்கையும், குடும்பத்தாரின் வாக்கையும் காணவில்லை என்று குறிப்பிட்டிருப்பது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.