செப்.1 முதல் குப்பைகளை வகை பிரித்து வழங்க வேண்டும்: மீறினால் அபராதம் என சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை
சென்னை: அதிக கழிவுகளை உருவாக்குவோர் செப்.1 முதல் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என வகை பிரித்து வழங்க வேண்டும். மீறினால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் தொடர்பாக அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில், ரிப்பன் மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஆணையர் சமீரன் பேசியதாவது: அதிக திடக்கழிவுகளை உருவாக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகள், ஓட்டல்கள் உள்ளிட்டோர் திடக்கழிவுகள் உருவாகும் இடத்திலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவுகள், அபாயகரமான கழிவுகளை தனித்தனியே வகை பிரித்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.