இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் தலைமையகம் அழிக்கப்பட்டது: அமெரிக்க ராணுவம்!
வாஷிங்டன்: ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (ஐஆர்ஜிசி) தலைமையகத்தை அழித்துவிட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. ‘பாம்பின் தலை வெட்டப்பட்டது’ என அமெரிக்கா இதை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து கூட்டாக ஈரான் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளன.
இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் காமேனி, அவரது குடும்பத்தினர், ஈரானின் முக்கிய தலைவர்கள் உட்பட சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்காவின் நேச நாடுகளாக உள்ள பஹ்ரைன், ஜோர்டான், குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்டது.
ஹிஸ்புல்லாவுக்கு பதிலடியாக லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்
பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு பகுதியில் புறநகர் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதை அந்நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, லெபனான் புரட்சி படையான ஹிஸ்புல்லா, ஈரான் உச்ச தலைவர் கமேனி மரணத்தை அடுத்து இஸ்ரேல் மீது ராக்கெட் மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கூட்டாக இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உயிரிழந்தார்.
இதையடுத்து மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளான பஹ்ரைன், ஜோர்டான், குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்டது. எண்ணெய் கப்பல் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. விமான சேவையும் மத்திய கிழக்கு பகுதியில் முடங்கி உள்ளது. இதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.