ஈரான் ஆதரவு போராட்டங்களை முடக்க மத்திய அரசு முயற்சி: இந்திய கம்யூ.
சென்னை: ஈரான் ஆதரவு போராட்டங்களை மத்திய பாஜக அரசு முடக்க முயற்சிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “சர்வதேச சட்டங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறைகளுக்கு எதிராக ஈரான் மீது போர் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ராணுவம் தொடுத்துள்ளன. இது ஈரானின் இறையாண்மைக்கு எதிரானது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சர்வாதிகாரப் போக்குடன் செயல்படுகிறார். அமெரிக்க காங்கிரஸின் இரு அவைகளின் அனுமதி இன்றியே, ஈரான் மீதான போரை டிரம்ப் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை கண்டிப்பதற்கு இந்திய அரசு தயங்குகிறது. அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்ந்து ஈரானும் மேற்காசியாவில் உள்ள அமெரிக்காவின் ராணுவத் தளங்களை தாக்கி வருகிறது. இதனால் இந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது. மேற்காசிய நாடுகளில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இது குறித்தெல்லாம் கவலைப்படாத மத்திய அரசு, அமெரிக்க - இஸ்ரேல் அட்டூழியத்தைக் கண்டிக்க துணிவு இல்லாமல், தற்போது அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் மூலம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், இந்தியாவில் நடைபெறும் ஈரானுக்கு ஆதரவான போராட்டங்களை கண்காணிக்குமாறும், போராடும் அமைப்புகள் மற்றும் குரல் கொடுக்கும் தனிநபர்களை கண்காணிக்குமாறும் வலியுறுத்தியுள்ளது. இது ஈரானுக்கு ஆதரவான போராட்டங்களை முடக்கும் நோக்கம் கொண்டது
இஸ்ரேல் ஆதரவு நிலையை மோடி அரசு மேற்கொண்டு வருகிறது. ஈரான் ஆதரவு போராட்டங்களையும் முடக்க முனைகிறது. எனவே இந்திய மக்கள், போருக்கு எதிரான இயல்பான மனநிலையுடன் ஈரானுக்கு ஆதரவாகவும், அமெரிக்க - இஸ்ரேலிய அரசுகளைக் கண்டித்தும் போராட்டம் நடத்துகின்றனர். இந்தப் போராட்டங்களை முடக்க நினைப்பது எதேச்சதிகார நடவடிக்கையாகும். இந்த ஜனநாயக விரோதப் போக்கை உடனடியாக மோடி அரசு கைவிட வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.