இந்திய அணுமின் உற்பத்திக்கு யுரேனியம் வழங்குகிறது கனடா - ஒப்பந்தம் கையெழுத்து
புதுடெல்லி: இந்தியாவின் அணு மின்சார உற்பத்திக்கு யுரேனியம் வழங்க கனடா ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.
கனடா பிரதமர் மார்க் கார்னி, பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் அரசுமுறைப் பயணமாக கடந்த பிப்.27-ம் தேதி இந்தியா வந்தார். அவரது இந்த பயணத்தின் கடைசி நாளான இன்று, பிரதமர் மோடியை புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்தார்.
இந்தs சந்திப்பின்போது, பிரதமர் மோடியும், பிரதமர் கார்னியும் இரு நாட்டு பிரதிநிதிகளுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியா - கனடா இடையேயான ஒத்துழைப்பில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை ஆய்வு செய்த அவர்கள், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, முக்கிய கனிமங்கள், விவசாயம், கல்வி, ஆராய்ச்சி உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து, அணு மின்சார உற்பத்திக்கான யுரேனியத்தை வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவுக்கு கனடா யுரேனியத்தை வழங்கும். கனிம வளத் துறையில் ஒத்துழைப்பு உட்பட பல ஒப்பந்தங்களில் இரு தரப்பும் கையெழுத்திட்டன.