பாகிஸ்தான் பரிதாபம் தொடர்கிறது: வங்கதேசத்திடம் ஒருநாள் தொடரை இழந்தது!
மிர்பூரில் நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டி கடைசி ஒவர் வரை சென்று கடைசியில் பாகிஸ்தான் தோல்வியில் முடிந்து தொடரையும் 1-2 என்று இழந்தது. முதலில் பேட் செய்த வங்கதேசம் தன்சித் ஹசன் (107) சதத்துடன் 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 290 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் அணி சல்மான் அலி ஆகாவின் (106) அற்புதமான விரட்டல் சதத்துடன் நெருக்கமாக வந்து 279 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்து தொடரையும் பறிகொடுத்தது.
இந்த இரண்டு அபார சதங்களை விட்டால் பாகிஸ்தான் அணியின் சரிவு, பாகிஸ்தான் வீரர்களின் ரன்னிங் என்னும் போதாமை, பினிஷ் செய்ய முடியாமல் தோல்வியை வாங்கிக் கட்டிக் கொண்ட பாகிஸ்தான் என்பது போன்ற படிமங்கள்தான் எஞ்சுகின்றன. 11 ஆண்டுகளுக்கு முன்பாக இரு அணிகளும் இருதரப்பு தொடரில் ஆடியது அதிலும் வங்கதேசம் வென்றது, இப்போது 11 ஆண்டுகளுக்குப் பிறகு இரு அணிகளும் இருதரப்பு தொடரில் மோதி இதிலும் பாகிஸ்தான் தோல்வி அடைந்துள்ளது.
முன்னதாக வங்கதேசம் சத நாயகன் தன்சித் ஹசன், சைஃப் ஹசன் (36) ஆகியோர் மூலம் 105 ரன்கள் தொடக்கம் கண்டது. தன்சித் ஹசன் 107 பந்துகளில் 6 பவுண்டரி 7 சிக்சர்களுடன் 107 ரன்கள் எடுத்தார். ஷாண்டோ 27, லிட்டன் தாஸ் 41, தவ்ஹித் ஹிருதய் 48 என்று பங்களிப்பு செய்ய வங்கதேசம் 290/5 என்ற நல்ல இலக்கை எட்டியது. ஆட்ட மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தன்சித் ஹசன் தட்டிச் சென்றார்.