Select Location
All Locations
State
Region
City / District
ஈரானுக்கு இனி ஆயுதங்கள் வழங்கமாட்டோம் என வாக்கு கொடுத்த சீனா - டிரம்ப்

ஈரானுக்கு இனி ஆயுதங்கள் வழங்கமாட்டோம் என வாக்கு கொடுத்த சீனா - டிரம்ப்

ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்து வைப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிகளுக்குச் சீனா ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி உட்பட பல தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதற்கிடையே கடந்த வாரம் இரு நாடுகளும் 2 வார போர் நிறுத்தத்திற்கு சம்மதித்தன. ஆனால் நிரந்தர போர் நிறுத்தம் குறித்து பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

தொடர்ந்து ஈரான் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்க கடற்படை முற்றுகையிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்த போரில் ஈரானுக்கு சீனா ஆயுத உதவிகள் வழங்கி வருவதாக கூறப்பட்டது.

இந்த சூழலில் ஈரானுக்கு இனி ஆயுதங்கள் வழங்கப்படாது என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தமக்கு உறுதி அளித்துள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்புவதை நிறுத்துமாறு சீன அதிபருக்கு தாம் நேரடியாகக் கடிதம் எழுதியதாகவும், அதற்கு சீனாவிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். தனது வரவிருக்கும் சீனப் பயணத்தின் போது, ஜி ஜின்பிங் தன்னை மிகவும் உற்சாகத்துடன் வரவேற்பார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்து வைப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிகளுக்குச் சீனா ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.

ஈரானிய துறைமுகங்கள் மீது அமெரிக்காவின் முற்றுகைக்கு மற்ற வல்லரசு நாடுகளிடமிருந்து பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பவில்லை என்றும், இதனால் வளைகுடா நாடுகள் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளார் முன்னதாக ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கும் நாடுகளிலிருந்து வரும் பொருட்களுக்கு 50% வரை இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் கூறியிருந்தார். இதற்கிடையே ஈரானுடன் மீண்டும் பாகிஸ்தானில் வைத்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளது என டிரம்ப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.


Malaimalar 16 hours ago
Home Flash News