Select Location
All Locations
State
Region
City / District
“ஆந்திராவின் எதிர்காலத்தை பணயம் வைக்கிறார் சந்திரபாபு நாயுடு” - மாணிக்கம் தாகூர்

“ஆந்திராவின் எதிர்காலத்தை பணயம் வைக்கிறார் சந்திரபாபு நாயுடு” - மாணிக்கம் தாகூர்

சென்னை: தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பதன் மூலம், மாநிலத்தின் எதிர்காலத்தை விட தனது அரசியல் இருப்புக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னுரிமை அளிப்பதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சித்தார் இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “கொள்கைகளை விட அதிகாரத்திற்கே முன்னுரிமை என்பதை சந்திரபாபு நாயுடு மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளார். தன் சொந்த மாமனாருக்கே துரோகம் செய்த ஒருவர், இப்போது தனது அரசியல் இருப்புக்காக ஆந்திரப் பிரதேசத்தின் எதிர்காலத்தையே பணயம் வைக்கத் தயாராக இருக்கிறார்.

நரேந்திர மோடியுடன் நின்றுகொண்டு, தெற்கின் குரலை பலவீனப்படுத்தும் பாகுபாடு நிறைந்த தொகுதி மறுவரையறையை அவர் ஆதரிக்கிறார். தொகுதி மறுவரையறையை எதிர்த்துப் போராடுவதற்குப் பதிலாக, அவர் இதனை ஊக்குவிப்பதைப் பற்றிப் பேசுகிறார். அநீதியை எதிர்த்து நிற்காமல், அதனை ஆதரிக்கும் வேலையை சந்திரபாபு நாயுடு செய்கிறார். மேலும், முறையான சாதிவாரி கணக்கெடுப்புக்கு முன்பே இந்த தொகுதி மறுவரையறை நடவடிக்கையை ஆதரிப்பதன் மூலம், மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைய வேண்டிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கதவுகளை அவர் திறம்பட மூடுகிறார். இது தலைமைத்துவம் அல்ல. இது திட்டமிட்ட சரணாகதி. குடும்பத்துக்கு துரோகம் செய்வதிலிருந்து மக்களுக்கு துரோகம் செய்வது வரை, சந்திரபாபு நாயுடுவின் இந்தப் போக்கு தெளிவாகத் தெரிகிறது” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, தொகுதி மறுவரையறை, மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாக்களை மக்களவையில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.


Hindu Tamil 10 hours ago
Home Flash News