வியாபாரிகளே உஷார்..! ரசாயன முறையில் மாம்பழங்கள் பழுக்க வைத்தால் ரூ.5000 அபராதம்..!
முக்கனிகளில் முதல் கனியாக இருப்பது மாம்பழம். இந்த மாம்பழத்தின் வாசனை எங்கிருந்தாலும் நம்மை சுண்டி இழுத்து சாப்பிட அழைக்கும். ஆனால் மாம்பழம் வாங்கும்போது அது கார்பைடு வைத்து பழுக்க வைக்கப்பட்டதாக இருப்பதால் ஏற்படும் விளைவுகளை நினைத்து தான் மக்கள் பயப்படுகிறார்கள்.
இதனையறிந்த உணவு பாதுகாப்பு துறை, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில், செயற்கை முறையில் ரசாயன பொருட்கள் பயன்படுத்தி மாம்பழங்களை பழுக்க வைக்கக்கூடாது என எச்சரித்துள்ளது. உணவு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ மாம்பழ விற்பனையாளர்கள் இயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்களை மட்டும் விற்பனை செய்ய வேண்டும். வரும் நாட்களில் தொடர் ஆய்வு மேற்கொள்ளப்படும் அப்போது, ரசாயன முறையில் மாம்பழங்கள் பழுக்க வைத்து விற்பனை செய்தால், அவை பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு 5000ரூபாய் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியாக இதே முறைகேட்டில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு கடையின் உணவு பாதுகாப்புத்துறை உரிமம் ரத்து செய்யப்படும்” எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கல் வைத்த மாம்பழத்தை கண்டறியும் வழிகள்:
செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தில் ஆங்காங்கே பச்சை நிறத்தில் திட்டுகள் இருக்கும்.
இந்த பச்சைநிற திட்டுகள் பழத்தில் இருக்கும் மஞ்சள் நிறத்தில் இருந்து தெளிவாக வேறுபட்டு காணப்படும்.
இயற்கையாக பழுத்த மாம்பழம் மஞ்சள் மற்றும் பச்சை நிறம் கலந்த ஒரே சீரான அளவில் கலந்ததுபோல இருக்கும்.
இயற்கையாக பழுத்த மாம்பழத்தை விட செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் அதிக மஞ்சள் நிறத்துடன் தோல் பளபளப்பாக இருக்கும். அதேபோல கல் வைத்து பழுக்க வைக்கப்படும்போது பழத்தின் தோல் சுருங்கிய தன்மையுடன் இருக்கும்.
செயற்கையாக ரசாயனக் கல் கொண்டு பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களில் சிலவற்றைச் சாப்பிடும்போது நாக்கில் சுர்ரென்று ஒருவகை எரிச்சல் ஏற்படும்.