தவெக அமைச்சரவையில் 19 மாவட்டங்களுக்கு அமைச்சர் பதவி இல்லை
சென்னை: தமிழக அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் 19 மாவட்டங்களுக்கு அமைச்சர் பதவி ஒதுக்கப்பட வில்லை. முதல்வர் விஜய்யின் அமைச்சரவையில், நாமக்கல் - 3; காஞ்சிபுரம், ஈரோடு, கோவை, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு தலா 2 அமைச்சர்கள்; புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருச்சி, கடலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு அமைச்சர் உள்ளனர்.
அதேநேரம், நீலகிரி, தென்காசி, நெல்லை, தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், திருவாரூர், தருமபுரி, கரூர், கிருஷ்ணகிரி ஆகிய 19 மாவட்டங்களை சேர்ந்த எம்எல்ஏக்கள் அமைச்சர் பட்டியலில் இடம்பெறவில்லை. அதே நேரம், ஒரு எம்எல்ஏ கூடஇல்லாத கன்னியாகுமரி மாவட்டத்தில், காங்கிரஸ் சார்பில் வென்ற ராஜேஷ்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
வந்தேமாதரம் சர்ச்சை மே.10-ம் தேதி முதல்வராக விஜய் பதவியேற்கும் நிகழ்ச்சியில் வந்தே மாதரம், அதன்பின் தேசிய கீதம், 3-வதாக தமிழ்த்தாய்வாழ்த்து பாடப்பட்டது சர்ச்சையானது. அப்போதே அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்றைய பதவியேற்பு நிகழ்விலும் அதேபோன்ற நடைமுறையே பின்பற்றப்பட்டது பேசு பொருளாகியுள்ளது.
ஆளுநர் அறிவுறுத்தல் அமைச்சராக காங்கிரசை சேர்ந்த ராஜேஷ்குமார் பதவியேற்கும் போது, பதவிப்பிரமாண உறுதிமொழியை வாசித்துவிட்டு இறுதியாக, கட்சித் தலைவர்கள் பெயரை குறிப்பிட்டு வாழ்க என்றார். அதேபோல், ஸ்ரீபெரும்புதூர் தவெக எம்எல்ஏ தென்னரசு கூடுதலாக சில வார்த்தைகளை பேசிய போதும், ஆளுநர் அதிகப்படியான எதையும் கூறக்கூடாது என்று அறிவுறுத்தினார்.
விஜய் அமைச்சரவையில் சென்னையை சேர்ந்த 7 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெரம்பூர் - விஜய், தி.நகர் - என். ஆனந்த், வில்லிவாக்கம் - ஆதவ் அர்ஜுனா, எழும்பூர் - ராஜ் மோகன், வேளச்சேரி - குமார், தாம்பரம் - சரத்குமார், ஆர்.கே நகர் மரியவில்சன் ஆகியோர் அமைச்சர் களாக பதவியேற்றுள்ளனர். 4 பெண் அமைச்சர்கள் சிவகாசி - கீர்த்தனா, அவினாசி - கமலி, குமாரபாளையம் - விஜய லட்சுமி, ராஜபாளையம் - ஜெகதீஸ்வரி ஆகிய 4 பெண்கள் அமைச்சர்களாகி உள்ளனர்.