முதல்வர் அறிவித்த 717 மதுக்கடைகளில் இதுவரை 436 டாஸ்மாக் கடைகள் மூடல்: அரசு
சென்னை: கல்வி நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 717 மதுபான சில்லறை விற்பனை கடைகள் மூடப்படும் என்ற முதல்வர் விஜய்யின் அறிவிப்புக்கு இணங்க இதுவரை 436 கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள கடைகளை மூட துறையின் அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: “தமிழக முதல்வர் கடந்த 11 அன்று, கல்வி நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றின் அருகில் உள்ள 717 மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூடிட அரசாணை பிறப்பிக்கப்பட்டதன் அடிப்படையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் க.விக்னேஷ் இன்று (சனிக்கிழமை) தமிழ்நாடு மாநில வாணிபக் கழக தலைமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இன்று வரை 436 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் அவற்றுடன் இணைந்துள்ள மதுக்கூடங்களும் மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களை மூடுவதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் விக்னேஷ், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மூடப்பட்ட மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரிந்து வந்த கடைப்பணியாளர்களின் நலன் பாதிக்கப்படாத வகையில் அருகிலுள்ள மதுபான சில்லறை விண்பனைக் கடைகளில் பணியமர்த்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், அனைத்து சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்துள்ள மதுக்கூடங்கள் இரவு 10 மணிக்கு மூடப்பட வேண்டுமெனவும், அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்கும் கடைப்பணியாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.