தவெகவும் பாஜகவும் செயல்பாடுகளால் ஒன்றாகி விட்டன: திமுக
தவெகவும் பாஜகவும் ஜனநாயகத்தை சிதைக்கும் செயல்பாடுகளால் ஒன்றாகிவிட்டதாக திமுக விமர்சித்துள்ளது. பாஜகவைப்போல் எதிர்க்கட்சியை உடைத்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுவதாக தவெக மீது குற்றம் சாட்டி, திமுகவின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சி இரண்டாக உடைக்கப்படுகிறது. எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்களில் பெரும்பகுதியினர் தனிக் குழுவாகப் பிரிந்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர். சட்டப்பேரவைத் தலைவரும் இந்த திடீர்க் குழுவையே அங்கீகரிக்கின்றார்.
தமிழ்நாட்டில் அதிமுகவை உடைத்து, தூயசக்தி தவெக நடத்திய ஜனநாயக கேலிக் கூத்தைப் பற்றி நாம் பேசவில்லை. இது மேற்கு வங்கத்தில் அவர்களின் கொள்கை எதிரி பாஜக செய்த செயல். தமிழ்நாட்டில் தவெக ஒருபடி மேலே சென்று எம்எல்ஏ-க்களை விலைக்கே வாங்கிவிட்டனர். பாஜக - தவெக பெயர்கள் வெவ்வேறானாலும் ஜனநாயகத்தைச் சிதைக்கும் செயல்பாடுகளால் ஒன்றாகிவிட்டனர். திருப்பரங்குன்றம் ஆவணப் படத்தைத் திரையிடத் தடை, பக்ரீத் குர்பானி கொடுக்கத் தடை என மதச்சார்பின்மையிலும் ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திலேயே தெரிந்துவிட்டது.
கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் மீது அமலாக்கத் துறையை ஏவியதற்கும் கண்டனம் தெரிவிக்கவில்லை. மிச்சம் இருப்பது மாநில உரிமை. தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட மத்திய அரசிடம் தெளிவுரை கேட்டு அதிலும் சமரசம் செய்யத் தயார் என்ற சிக்னலை தில்லிக்குக் கொடுத்து விட்டது இந்த அரசு. மொத்தத்தில், ஜனநாயக - மதச்சார்பற்ற - மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காத ஓர் அரசு அமைவதற்காகத்தான் ஆதரவு தருகிறோம் என்று சொன்ன கட்சிகளின் முகத்தில் ஒரே மாதத்தில் கரியைப் பூசியிருக்கிறார்கள்" என்று கூறியுள்ளனர்.