2031-க்குள் தமிழகத்தில் முதியோர் எண்ணிக்கை அதிகரிக்கும்: பணிபுரிவோரின் எண்ணிக்கை குறையும் என வெள்ளை அறிக்கையில் தகவல்
சென்னை: தமிழகத்தில் 2031-ம் ஆண்டுக்குள் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து, பணிபுரிவோரின் எண்ணிக்கை குறையும் என நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த வெள்ளை அறிக்கை 2026-27-ம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவு திட்ட மதிப்பீடுகளை ஆய்வு செய்கிறது.
அதன்படி, மாநிலத்தின் மொத்த வரி வருவாய் ரூ.2,29,579 கோடியாக, அதாவது 19 சதவீத வளர்ச்சியுடன் கணிக்கப்பட்டுள்ளது. எனினும், வழக்கமான செயல்பாட்டு சூழ்நிலையின் அடிப்படையில், உண்மையான வளர்ச்சி விகிதம் சுமார் 8 சதவீதமாகவே இருக்கும் என கருதப்படுகிறது. அதன்படி, வருவாய் சுமார் ரூ.2,08,000 கோடியாக மட்டுமே இருக்கும்.
செலவினங்களை பொறுத்தவரை முக்கியத் தொடர் செலவினங்கள் இந்த மதிப்பீடுகளில் இடம்பெறவில்லை. தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்துக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகை ரூ.16 ஆயிரம் கோடியும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஒழுங்குமுறை சொத்துகளுக்காக இந்நிறுவனத்துக்கு ஆண்டுதோறும் செலுத்தப்பட வேண்டிய ரூ.11,800 கோடியும் முழுமையாக கணக்கில் கொள்ளப்படவில்லை. இதனால், வருவாய் செலவின ஒதுக்கீடு ரூ.27,800 கோடிக்கு குறைவாக காட்டப்பட்டுள்ளது
நிதிப் பற்றாக்குறை
இவை அனைத்தையும் இணைத்து இடைக்கால வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வருவாய் பற்றாக்குறை சுமார் ரூ.48,698 கோடிக்கு மாறாக, 2026-27-ம் ஆண்டில் ரூ.90,500 கோடியை எட்டக்கூடும்.
அதேபோல், வரவு செலவு திட்டத்தில் மதிப்பிடப்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறை ரூ.1.22 லட்சம் கோடி ரூபாய்க்கு மாறாக ரூ.1.64 லட்சம் கோடி ரூபாயை நெருங்கக்கூடும் என்பதை உணர்த்துகிறது.
தமிழகத்தில் முதியவர்களின் பங்கு 2011-ம் ஆண்டில் 10.6 சதவீதமாக இருந்த நிலையில், அது 2031-ம் ஆண்டுக்குள் 18.2 சதவீதமாக உயரும் என்றும், முதியோர் சார்ந்திருக்கும் விகிதம் 2036-ம் ஆண்டுக்குள் 32.7 சதவீதமாக உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. பணிபுரியும் வயதினர் எண்ணிக்கை குறைந்து வருவதால், வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் குறைகிறது.
செலவினங்களை அதிகரிக்கும்
அதேவேளையில் அதிகரித்து வரும் முதியவர்களின் எண்ணிக்கை சமூகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார சேவைகளுக்கான செலவினங்களை அதிகரிக்கச் செய்கிறது. இந்த கத்திரிக்கோள் விளைவு மாநிலத்தை கடன் வலையை நோக்கி தள்ளுகிறது.
இந்த வெள்ளை அறிக்கை முன்வைக்கும் தீர்வு சவாலானது. ஆனால், சாத்திய மற்றது அல்ல. வருவாய் வசூலிக்கும் துறைகளில் உள்ள இழப்புகள் மற்றும் ஊழலை கட்டுப்படுத்துதல், சரக்கு கொள்முதல் மற்றும் பணிகளுக்கான செலவுகளை குறைத்தல், பொது மக்கள் மீது புதிய சுமை ஏதுமின்றி கூடுதல் நிதியாதாரங்களைத் திரட்டுதல் ஆகியவே அந்த வழிமுறைகள் ஆகும்.
தமிழகத்தின் மக்கள் தொகை அமைப்பில் ஏற்பட்டு வரும் மாற்றம் மற்றொரு பெரும் சவாலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.