வரலாற்றுச் சிறப்புமிக்க லார்ட்ஸ் டெஸ்டில் வென்ற இந்திய மகளிர் அணி: சச்சின் வாழ்த்து!
இங்கிலாந்துக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க லார்ட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்தியா - இங்கிலாந்து இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது.
இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 285 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 115 ரன்கள் என்ற முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து 341 ரன்கள் எடுத்திருக்கையில் டிக்ளேர் செய்தது. இங்கிலாந்தைக் காட்டிலும் இந்திய அணி 456 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், 457 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 457 ரன்கள் இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி 186 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி 270 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் பெருமைமிகு வெற்றியைப் பெற்ற இந்திய மகளிர் அணிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துப் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், ”கிரிக்கெட் வீரரும் ஒவ்வொருவரும் லார்ட்ஸ் மைதானத்தில் விளையாட வேண்டும் என்ற கனவைக் கொண்டுள்ளனர். கடந்த நான்கு நாட்களில், முதல்முறையாக மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிரிக்கெட்டின் தாயகமான லார்ட்ஸில் நடைபெற்றதால் ஒரு புதிய தலைமுறை அந்தக் கனவை நினைவாக்கியுள்ளனர்.
ஓரு அற்புதமான வெற்றியைப் பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். ஸ்மிருதியின் நிதானம், யாஸ்திகாவின் அபாரமான சதம் மற்றும் கிராந்தியின் ஐந்து விக்கெட் சாதனை ஆகியவை இந்தத் தருணத்தை மேலும் சிறப்பாக்கியுள்ளன. மகளிர் கிரிக்கெட்டின் குறிப்பிடத்தக்கப் பயணத்தில் இது மற்றுமொரு சிறப்பான முன்னேற்றப் படியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.