ஆப்கன் மழை, வெள்ளத்தில் சிக்கி 23 பேர் பலி.. காணாமல் போனவர்களை மீட்கும் பணி தீவிரம்!
ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழை வெள்ளத்தில் சிக்கி 23 பேர் பரிதாபமாகப் பலியாகினர். மேலும், பேரழிவை ஏற்படுத்திய இந்த வெள்ளத்தில் காணாமல் போன 100-க்கும் மேற்பட்டவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான நூரிஸ்தான் மற்றும் மாகாணத்தின் தலைநகர் பரூனில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால், நேரிட்ட வெள்ளப்பெருக்கில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகவும், கட்டட இடிபாடுகளில் சிக்கி 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஆப்கானிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
நாட்டிலுள்ள 34 மாகாணங்களில் 10 மாகாணங்கள் கடுமையான கனமழை, இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று ஆகியவற்றால் பாதிக்கப்படும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதனால், ஆற்றங்கரைகள் மற்றும் வெள்ள அபாயமுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நூரிஸ்தான் தலைநகர் பரூனில் வெள்ளத்தில் சிக்கிய உருக்குலைந்த கட்டடங்கள் மற்றும் மலைச்சரிவுகளில் பாறைகளை அப்புறப்படுத்தும் பணிகள் தொடர்பான விடியோக்கள் இணையத்தில் வெளியாகியிருக்கின்றன. இந்த வெள்ளப் பாதிப்பு குறித்து பரூன் நகரவாசியான ஜுபைர் அகமது கூறுகையில், “நகர் வழியாகப் புகுந்த வெள்ள நீரில், உடல்கள் அடித்துச் செல்லப்படுவதை நாங்கள் பார்த்தோம். இந்த வெள்ளப் பாதிப்பு கடும் சேதத்தையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளதாக” சோகத்துடன் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் கடுமையான வானிலை மாற்றச் சூழலில் சிக்குவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்னதாக, 2024-ஆம் ஆண்டில், திடீரென நேரிட்ட வெள்ளப்பெருக்கில் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஆப்கானிஸ்தானில் நடப்பாண்டின் தொடக்கத்திலும் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 110 பலியான நினைவுகூரத்தக்கது.