Select Location
All Locations
State
Region
City / District
டெல்லியில் இணைய சேவை முடக்கம்: அவசர வழக்காக விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் ஒப்புதல்!

டெல்லியில் இணைய சேவை முடக்கம்: அவசர வழக்காக விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் ஒப்புதல்!

டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தர் சுற்றுவட்டார பகுதியில் இணைய சேவை முடக்கப்பட்டதற்கு எதிரான பொதுநல மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று அவசர வழக்காக விசாரிப்பதற்கு ஏற்றுக்கொண்டுள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு புகார்களைக் கண்டித்து, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த ஜூன் 20 முதல் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இணைய சேவை மற்றும் மெட்ரோ சேவை முடக்கப்பட்டது. மூன்று நாட்களாக ஜந்தர் மந்தரைச் சுற்றியுள்ள 1.5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு மொபைல் இணைய சேவைகளை முடக்கப்பட்டது. இணைய முடக்கத்தால் ஜந்தர் மந்தர் மற்றும் அதன் அருகிலுள்ள கன்னாட் பிளேஸ் போன்ற வணிகப் பகுதிகளில் கடைகள், உணவகங்கள் மற்றும் அலுவலகங்கள் மாலை 6:30 மணிக்கே மூடப்பட்டு வணிக நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வலியுறுத்தி இந்த மனுவை பொதுநல மனுவாக மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதனை டெல்லி உயர்நீதிமன்ற ஏற்று தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோர் அடங்கிய அமர்வு பிற்பகல் 2.30 மணிக்கு இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது. முன்னதாக, மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி தொடர்பான வழக்கை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், இணைய முடக்கத்திற்கு எதிரான இந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் அவசரமாக விசாரிக்க ஏற்றுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Dinakaran 1 hour ago
Home Flash News