கொல்கத்தா காளி கோயிலின் ரூ.100 கோடி ஆபரண பெட்டக சாவியை காணவில்லை - நீதிமன்றத்தில் புகார் மனு
புதுடெல்லி: கொல்கத்தாவில் உள்ள ஆதி கங்கை ஆற்றின் கரையில் காளிகாட் கோயில் அமைந்துள்ளது. இது, இந்துக்களின் புகழ்பெற்ற மற்றும் புனித தலமாகக் கருதப்படுகிறது. சிவனின் கோபத்திற்கு ஆளான பார்வதி தேவியின் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இந்த நிகழ்வில் பார்வதி தேவியின் வலது பாதத்தின் கால் விரல்கள் இங்குதான் விழுந்ததாக நம்பப்படுகிறது. இக்கோயிலில் நீண்ட தங்க நிற நாக்கைக் கொண்ட காளி தேவியின் தனித்துவமான சிலை ஒன்று உள்ளது. கொல்கத்தாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க காளிகாட் கோயில் சமீபகாலமாக பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
கோயிலுக்கு வரும் பக்தர்களால், பல நூறு ஆண்டுகளாக சேர்ந்த ஆபரணங்கள் ஒரு பெட்டகத்தில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. அம்மனின் ஆபரணங்கள் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களைப் பாதுகாப்பதற்காக அரசு வங்கி லாக்கர் ஒதுக்கப்பட்டிருந்தாலும், அதற்கான சாவி 1980-ம் ஆண்டு முதல் காணாமல் போய்விட்டதாகப் புகார் கிளம்பி உள்ளது. இப்புகாரை விசாரிக்கக் கோரி அப்பகுதியின் பழமையான நிலப்பிரபுக்கள் குடும்பத்தினரில் முக்கியமானவரான சபர்னா ராய் சவுத்ரி கொல்கத்தா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இது குறித்து சபர்னா ராய் மனுவில் கூறியிருப்பதாவது: கோயிலின் சொத்துகளையும் ஆபரணங்களையும் பாதுகாப்பதற்காகவே இந்த பாதுகாப்பு பெட்டகம் உருவாக்கப்பட்டது. இதன் சாவி, கடந்த 46 ஆண்டுகளுக்கும் மேலாகக் காணாமல் போயுள்ளது.
கோயில் சொத்துகளின் கணக்கைக் கையாளும் பொறுப்பைக் கொண்ட குழுவின் பதவிக்காலமும் முடிந்துவிட்டது. அம்மனுக்குச் சொந்தமான அந்த விலைமதிப்பற்ற ஆபரணங்கள் எங்கே உள்ளன? அவை பாதுகாப்பாக உள்ளனவா? என்ற ஆழ்ந்த கவலை எழுந்துள்ளது. மேலும் இதில், ரூ.1,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள நிதி முறைகேடுகளும், மோசடிகளும் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இவ்விவகாரத்தை விசாரித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.