‘செல்லமே மகளே... சந்தன அகளே...’ - மகள் பாசத்தில் ‘பத்தா’ விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி - பாலாஜி தரணீதரன் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகும் படம் ‘பத்தா’. இதற்கு முன்பு ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சீதக்காதி’ உள்ளிட்ட படங்களை உருவாக்கியுள்ளனர். இப்படத்தின் அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் போஸ்டருடன் வெளியானது. அதில் ரெட்ரோ லுக்கில் வாயில் சிகரெட் வைத்தபடி விஜய் சேதுபதி பார்க்கும் புகைப்படம் இடம் பெற்றிருந்தது.
இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இப்படத்தை அட்லீயின் ‘ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டூடியோஸ்’, ஸ்டார் ஸ்டூடியோ 18 மற்றும் ஏ சினி 1 ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. அட்லீ மட்டும் வழங்குகிறார். அக்டோபர் 1ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது. 80ஸ் காலகட்டத்தில் நடக்கும் ஒரு கதையாக இப்படம் உருவாகிறது. இந்த நிலையில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. மியூசிக் வீடியோவுடன் வெளியாகியுள்ள இப்பாடலை சாய் அபயங்கர் பாடி நடித்துள்ளார். இவருடன் ஹரினியும் பாடியுள்ளார்.
இப்பாடல் அப்பா - மகள் பாசத்தை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதற்கேற்றாற்போல் ‘செல்லமே மகளே... சந்தன அகளே...’ என்ற வரிகளில் ஆரம்பிக்கிறது. இப்பாடலுக்கு கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். பாடலில் விஜய் சேதுபதி அவரது மனைவியாக நடிக்கும் லிஜோ மோல் ஜோஸ் குழந்தையாக சஹஸ்ரா ஸ்ரீ வரும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இப்பாடல் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.