அண்ணாவின் முழக்கங்களை நெஞ்சில் ஏந்துவோம்.. பேரறிஞர் அண்ணாவுக்கு முதலமைச்சர் விஜய் புகழஞ்சலி
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி அவரை நினைவுகூர்ந்து முதலமைச்சர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார். அண்ணாவின் கொள்கைகளை நெஞ்சில் ஏந்தி சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் காக்க உறுதியேற்போம் என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கிய முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் விஜய் அவரை நினைவுகூர்ந்து புகழாரம் சூட்டியுள்ளார்.Politics
ஏழை, எளிய மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த பேரறிஞர் அண்ணாவின் தொலைநோக்குப் பார்வையையும், மக்கள் சேவையையும் நெஞ்சார நினைவுகூர்ந்து போற்றுவதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
எழுச்சியூட்டும் மேடைப் பேச்சாலும், கூர்மையான எழுத்தாற்றலாலும் மக்கள் மனங்களைக் கவர்ந்த அண்ணா, மக்களின் பேராதரவுடன் ஆட்சிப் பொறுப்பேற்றார். தமிழ் மொழி மீது கொண்ட அளவற்ற பற்றின் காரணமாக, மாநிலத்திற்கு “தமிழ்நாடு” எனப் பெயர் சூட்டியதுடன், மாநில சுயாட்சிக்கு வித்திட்டதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கி, தமிழ்நாட்டின் சமூக மற்றும் அரசியல் வரலாற்றில் அண்ணா தனி முத்திரை பதித்தவர் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
அண்ணாவின் “கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு”, “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” உள்ளிட்ட உயரிய முழக்கங்களை நெஞ்சில் ஏந்தி, சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை தழைத்தோங்கவும், தமிழின் பெருமையை காத்திடவும் அவரது பிறந்தநாளில் உறுதியேற்போம் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.