சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ரயில் சேவை: 45 நாட்களுக்கு தினமும் 44 ரயில்கள் ரத்து
"சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில், 45 நாட்களுக்கு தினமும் 44 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக, அறிவிப்பு வெளியாகி உள்ளது"
சென்னை புறநகர் ரயில் சேவை
சென்னை புறநகர் ரயில் சேவை மிக முக்கிய பொது போக்குவரத்து வருகிறது. குறிப்பாக சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை இயக்கக்கூடிய, மின்சார ரயிலில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்த தடத்தில் ரயில்கள் ஒரு சில நாட்கள் ரத்து செய்யப்பட்டாலே, பயணிகள் பெரிதளவு பாதிப்படைவார்கள்.
இந்தநிலையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால், சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு தட்டத்தில் மின்சார ரயில் சேவைகள் வரும் 20-ஆம் தேதி முதல் ஏப்ரல் 05-ஆம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
44 ரயில்கள் ரத்து
எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால், விரைவு ரயில்களின் சேவைகள் ஏற்கனவே மாற்றம் செய்யப்பட்டது. இந்தநிலையில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தளத்திலும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு தளத்தில் தற்போது இயக்கப்பட்டு வரும் 208 ரயில்களுக்கு பதிலாக, 164 ரயில் சேவைகள் மட்டும் இயக்கப்படும் என அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் சேவைகள் 45 நாட்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சென்னை கடற்கரையில் இருந்து 84 ரயில் சேவைகளும், செங்கல்பட்டு தாம்பரத்தில் இருந்து 80 ரயில் சேவைகளும் இயக்கப்படும். இதில் 11 ரயில்கள் சென்னை கடற்கரை - எழும்பூர் வரை இரு மார்க்கத்திலும் இயக்கப்படும். அதே சமயம் ஏசி மின்சார ரயில் சேவையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.