திமுக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறும் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை: வைகோ திட்ட வட்டம்
திருச்சி விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று அளித்த பேட்டி: அனைவருக்கும் பிரமிப்பூட்டும் வகையில் 36 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். இது வேலை நாடுநர்களுக்கு ஒரு நல்ல செய்தி. இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையிலும், பொருளாதாரத்தில் தமிழ்நாட்டை முதலிடத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும் இருக்கும். இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா? நீடிக்காதா? என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஓரிருவர் விமர்சனம் செய்து அறிக்கை கொடுத்து வருகிறார்கள்.
தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கும் என்று நம்புகிறேன். திமுக கூட்டணி வெற்றி பெறும், அதிலும் திமுக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறும். கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. இடைக்கால பட்ஜெட் பொதுமக்களுக்கு காது குத்தும் வேலை என எடப்பாடி விமர்சித்துள்ளார். ஆனால் இடைக்கால பட்ஜெட் காதிலே பொன் ஆபரணம் சூட்டுகிற வேலை என்பதுதான் உண்மை. இந்தியாவே கடனில் தான் உள்ளது. எனவே தமிழ்நாட்டின் கடன் சுமை ஒரு பொருட்டல்ல. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை தெளிவாக வகுத்து சிறப்பாக செயல்படுத்தக்கூடியவர். எனவே அவரே மீண்டும் முதல்வராவார் என உறுதிபட கூறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்