இப்படியே நீடித்தால் 2 நாட்களில் உணவகங்கள் மூடப்படும் - ஓட்டல் உரிமையாளர்கள் எச்சரிக்கை
திருப்பூர் மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க செயலாளர் நாகராஜன் கூறுகையில், ”சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக கடையை அடைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை வணிக சிலிண்டரை பயன்படுத்தும், பெரிய உணவகங்கள், நடுத்தர உணவகங்கள், சிறிய உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் என 2500-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.
தினசரி 2 லட்சம் பேர் உணவகங்களை நம்பி உள்ளனர். இதில் 50 ஆயிரம் பேர் முழுமையாக ஓட்டல்களை மட்டும் நம்பி உள்ளனர். அடுத்த 2 நாட்கள் மட்டுமே உணவகத்தை நடத்த முடியும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த அளவிற்கு தான் சிலிண்டர்கள் இருப்பு உள்ளது. விறகு அடுப்பு வைத்து சமைக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி உள்ளிட்ட பல்லேறு பிரச்சனைகள் உள்ளன. 1500 சிலிண்டர்கள் தினசரி தேவைப்படும் நிலையில், தற்போது வணிக சிலிண்டர்கள் சீராக கிடைத்தாலும் எப்போது வேண்டுமானாலும் நிறுத்தப்படும் என எங்களது ஏஜென்டுகள் தெரிவித்துள்ளனர்.
எனவே வரும் நாட்களில் தட்டுப்பாடு காரணமாக அனைத்து வகை உணவுகளும் செய்ய முடியாது. தக்காளி சாதம் போன்ற கலவை சாதம் மட்டும் தான் கிடைக்கும். அனைத்து உணவகங்களும் கியாஸ் அடுப்பு வைத்து அதற்கான வசதிகள் செய்துள்ள நிலையில், விறகு அடுப்பு மூலம் அனைத்து வகையான உணவுகளும் செய்ய முடியாது. ஒரே சமயத்தில் விறகு அடுப்புக்கும், மின்சார அடுப்பிற்கும் மாறவும் முடியாது. ஏனெனில் அதற்கான கட்டமைப்புகள் எந்த உணவகங்களிலும் தயாராக இல்லை. இந்த சூழ்நிலையில், வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அனைத்து ஓட்டல் உரிமையாளர்களுடன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளோம். இந்த கியாஸ் தட்டுப்பாடு காரணமாக எந்த உணவகங்களிலும், எந்தவித விலையற்றமும் இருக்காது என உறுதி அளிக்கிறோம். கியாஸ் தட்டுப்பாடு ஏற்பட்டு உணவகங்கள் மூடும் நிலை ஏற்பட்டால் இதனை சார்ந்து பணியாற்றி வரும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் நிச்சயம் பாதிக்கப்படும்.
உணவகங்கள் மூடப்படும் பட்சத்தில் அவர்களுக்கு சம்பளம் வழங்குவது என்பது இயலாத காரியம். எனவே, மத்திய அரசு உடனடியாக இது குறித்து நடவடிக்கை மேற்கொண்டு வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.