பின்னலாடை உற்பத்திக்கான நூல் விலை கிலோவுக்கு ரூ.7 உயர்வு: ஏற்றுமதியாளர்கள் கவலை
திருப்பூர்: பின்னலாடை ஏற்றுமதி, உள்நாட்டு வர்த்தகம் மூலமாக ஆண்டுக்கு சுமார் ரூ.70 ஆயிரம் கோடிக்கு மேல் திருப்பூரில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. பின்னலாடை உற்பத்தியின் மூலப் பொருளான நூலின் விலையை அடிப்படையாகக் கொண்டே ஆடைகளின் விலையும் நிர்ணயம் செய்யப்படுகிறது. பின்னலாடை உற்பத்திக்கான நூல் விலை மாதம்தோறும் 1 மற்றும் 16-ம் தேதிகளில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன்படி, மார்ச் இரண்டாவது பகுதிக்கான நூல் விலையை நூற்பாலைகள் நேற்று வெளியிட்டன.
இதில், பின்னலாடைகள் உற்பத்திக்கான அனைத்து வகையான நூல்களின் விலையும், கிலோவுக்கு ரூ.7 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு பின்னலாடை உற்பத்தியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூறியதாவது: நூல் விலையானது பிப்ரவரி மாதம் கிலோவுக்கு ரூ.7 உயர்த்த நிலையில், தற்போது மேலும் ரூ.7 உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, போர் காரணமாக ஏற்றுமதி செய்யப்பட்ட பின்னலாடைகள், வர்த்தகர்களுக்குச் சென்றடையாமல் பல்வேறு இடங்களில் தேக்கமடைந்துள்ளன. இந்நிலையில், நூல் விலை உயர்ந்துள்ளது. நூல் விலையைக் கணக்கிட்டே ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்கிறோம். இந்த சூழலில் விலை உயர்ந்திருப்பது தொழிலை பெரிதும் பாதித்துள்ளது. நூல் விலையை சீராக வைத்திருக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.