’கருப்பாக இருப்பதால்.. 23 ஆண்டுகளாக வர்ணனை செய்ய மறுப்பு’ - முன்னாள் தமிழக வீரர் வேதனை!
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன், 23 ஆண்டுகளாக நிறப்பாகுபாட்டால் பிசிசிஐ வர்ணனையாளர் பொறுப்பிலிருந்து புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கருப்பாக இருப்பதால் முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை என அவர் வேதனை தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டு இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூத்த வர்ணனையாளரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன், 23 ஆண்டுகளுக்குப் பிறகு பிசிசிஐ வர்ணனையாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவருடைய ஓய்வு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பல ரசிகர்கள் ஏன் ஓய்வு பெறுகிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த அவர், தான் கருப்பாக இருப்பதால் நிறப்பாகுபாடு காட்டப்படுவதாகவும், கடந்த 23 ஆண்டுகளாக முக்கிய வர்ணனைகளில் தன்னை பங்கேற்க அனுமதிக்காமல் புறக்கணிப்பட்டதாகவும் மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவராமகிருஷ்ணனின் கிரிக்கெட் வாழ்க்கை வெறும் 4 ஆண்டுகளாக குறுகியதாக இருந்தாலும், சிறப்பானதாகவும் அமைந்தது. ஒல்லியான உடலமைப்பு கொண்ட லெக்-ஸ்பின்னரான அவர், தனது 17 வயதிலேயே இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியில் அறிமுகம் பெற்றார். 1980-களில் ஒரு தலைசிறந்த லெக்-ஸ்பின்னராகத் திகழ்ந்த லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன், கூர்மையான லெக்-பிரேக், கூக்ளி மற்றும் டாப்-ஸ்பின் பந்துகளை வீசுவதில் தனது அசாதாரண திறமைக்காகப் புகழப்பட்டார். 1985-ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட்டை வென்ற இந்திய அணியில் ஒரு முக்கிய வீரராக இருந்த அவர், தனது அதிரடி சுழற்பந்துவீச்சால் கேம் சேஞ்சிங் வீரராக ஜொலித்தார்.
1983-ல் அறிமுகம் பெற்று வெறும் ஒன்பது டெஸ்ட் மற்றும் 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பிறகு, 1987-ஆம் ஆண்டு அவரது சர்வதேசப் பயணம் முடிவுக்கு வந்தது.