தொடர்ந்து புறக்கணிக்கப்பட்ட விஜயதரணி -இறுதியில் சர்ப்ரைஸ் கொடுத்த பாஜக
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாகப் பரப்புரையில் இறங்கியுள்ளன. இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி இருக்கிறது. விடுமுறை நாட்கள் நீங்கலாக வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் ஒரு நாளே இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர். எல்லாக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ள சூழலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடாத நிலை நிலவி வந்தது.
இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தேர்தல் குழு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான 27 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை இன்று (03.04.2026) வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முக்கியமான தலைவர்கள் பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மயிலாப்பூர் தொகுதியில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், அவினாசி (தனி) தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த எஸ்.விஜயதரணி விளவங்கோடு தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜகவில் சேர்ந்த அவருக்கு பதவிகள் கொடுக்கப்படாததால் விஜயதரணி ஏமாற்றத்திலேயே இருந்து வந்தார். அண்மையில் தமிழக பாஜகவிற்கு முக்கிய பொறுப்பாளர்கள் நியமனத்தின் போதும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது அவர் வழக்கமாக காங்கிரசில் இருந்தபோது போட்டியிட்டு வென்ற விளவங்கோடு தொகுதியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.