பிரசாரத்தில் ஈடுபட பிரதமர் மோடி 15-ந்தேதி கன்னியாகுமரி வருகை
பிரதமர் பங்கேற்கும் பொதுக் கூட்டத்திற்காக பிரம்மாண்டமான இடத்தை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தொகுதி வாரியாக முக்கிய தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு தொகுதியிலும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.
ஏற்கனவே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து குமரி மாவட்டத்தில் பிரசாரம் செய்தார்.
இந்தநிலையில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வருகிற 15-ந்தேதி குமரி மாவட்டத்திற்கு வர உள்ளார். அவர் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகிற 15-ந்தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலமாக கேரளம் மாநிலம் திருவனந்தபுரம் வருகிறார். பின்பு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக குமரி மாவட்டத்திற்கு வருகிறார்.
பிரதமர் மோடி ஒரே மேடையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 வேட்பாளர்கள், நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 வேட்பாளர்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 வேட்பாளர்கள், தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 வேட்பாளர்கள் என 22 வேட்பாளர்களையும் ஆதரித்து ஒரே மேடையில் பிரசாரம் செய்கிறார். பிரதமர் பங்கேற்கும் பொதுக் கூட்டத்திற்காக பிரம்மாண்டமான இடத்தை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. குளச்சல் தொகுதிக்குட்பட்ட பேயோடு பகுதியில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவிலான இடத்தை முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது பா.ஜ.க. குமரி மாவட்ட தலைவர் கோபக் குமார் மாவட்ட பொருளாளர் முத்துராமன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். பிரதமர் மோடி தேரதல் பிரசாரத்தில் ஈடுபட குமரி மாவட்டத்திற்கு வர இருப்பது பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சியினரிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.