கடவுளிடமும் கொள்ளையடிக்கிறது புதுச்சேரி அரசு: ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்; புதுச்சேரிக்கு அடிக்கடி வந்து உங்களை சந்திக்காதது தவறு. புதுச்சேரி மக்களின் அன்புக்காக அடிக்கடி இங்கு வருவதற்கு ஆசைப்படுகிறேன். புதுச்சேரி மாநிலம் புதுச்சேரி மக்களால் ஆளப்படவில்லை என்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது. புதுச்சேரி மக்களின் எண்ணத்தின்படி புதுச்சேரி அரசு அமையவில்லை, மாறாக டெல்லியில் இருந்து திணிக்கப்படுகிறது.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிக்கப்படும் என்று அளித்த வாக்குறுதியை பாஜக நிறைவேற்றவில்லை.
புதுச்சேரியை டெல்லியில் இருந்து துணை நிலை ஆளுநர் மூலம் ரிமோட் கன்ட்ரோல் செய்கிறது பாஜக; உள்ளூர் தலைவர்களை ஓரங்கட்டிவிட்டது பாஜக; உள்ளாட்சி தேர்தலை புதுச்சேரியில் நடத்தவில்லை. புதுச்சேரியை அதானிக்கு விற்க பார்க்கிறது பாஜக. காரைக்கால் துறைமுகம் ஏற்கனவே அதானிக்கு விற்கப்பட்டுவிட்டது. புதுச்சேரி மின்வாரியம் அதானிக்கு விரைவில் விற்கப்பட இருக்கிறது. புதுச்சேரியில் போலி மருந்து தயாரிக்கப்படும் நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
புதுச்சேரியில் ஊழல் உயிரை பறிக்கும் வகையில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஒப்பந்தத்துக்கும் புதுச்சேரியில் 30 சதவீதம் கமிஷன். வசூல் ஏஜெண்டாக மாறி, கமிஷன் வாங்குவது மட்டுமே புதுச்சேரி அரசின் வேலையாக உள்ளது. கமிஷன் வாங்கிக் கொண்டு மதுபான கடைகளுக்கான உரிமங்கள் விற்கப்படுகின்றன. பள்ளி, கோயில்கள் அருகே மதுபான கடைகள் திறக்கப்படுகின்றன. கோயில் நிலங்களை அபகரித்து விட்டனர். கடவுளிடமும் கொள்ளையடிக்கிறது புதுச்சேரி அரசு; புதுச்சேரியில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது, பெண்கள், குழந்தைகள் இரவில் நடக்க அஞ்சுகின்றனர்