பெண்களுக்கு தற்காப்பு கலைகள் அவசியம் - ஜூடோ கலையில் சாதித்து வரும் அப்ஸா நூஹா!
தவெக தலைவர் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ சிபிஎஃப்சி-யிடம் சிக்கி பெரும் பிரச்சனையை சந்தித்தது. படத் தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் சென்றும் பலன் கிடைக்கவில்லை. சிபிஎஃப்சி-யும் விடாமல் முட்டுக்கட்டை போட்டது. இறுதியில் படக்குழு வழக்கை வாபஸ் பெற்று மறு சான்றிதழுக்கு சிபிஎஃப்சி-யிடம் சமர்பித்தது. படம் பார்த்த சிபிஎஃப்சி தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என பரிந்துரைத்தது. ஆனால் அதன்பிறகு எந்த தகவலும் வெளியாகவில்லை. ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவிருந்த படம் தொடர் தாமதமாகி வந்ததால் வெளிநாட்டு உரிமை, ஓடிடி உரிமை என பல வியாபரங்கள் பாதிக்கப்பட்டது.
இந்த சூழலில் நேற்று ஜன நாயகன் படத்தின் 5 நிமிட காட்சிகள் இணையத்தில் கசிந்தது. பின்பு இன்று மொத்த படமும் வெளியானது. இதனால் படக்குழுவினரும் விஜய் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் அந்நிறுவனத்தின் சட்ட ஆலோசகர், விஜயன் சுப்ரமணியன் படத்தை கசிய விட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும் படத்தை பதிவிறக்கம் செய்வதோ, அனுப்புவதோ, சேமிப்பதோ இதுபோன்று எது செய்தாலும் சட்டப்படி குற்றம் எனக்கூறி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார்.
இந்த சட்டவிரோதமான நடவடிக்கையை கண்டித்து பல திரைபிரபலங்கள் தங்களது எக்ஸ் பக்கத்தில் குரல் கொடுத்து வருகின்றனர். தெலுங்கு மூத்த நடிகர் சிரஞ்சீவி, “ஜன நாயகன் படம் துரதிர்ஷ்டவசமாக இணையத்தில் கசிந்திருப்பது எனக்கு மிகுந்த கவலையளிக்கிறது. சினிமா என்பது நம்பிக்கை, கடும் உழைப்பு மற்றும் பலரின் கூட்டுக்கனவுகளின் அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்ட ஒன்று. இத்தகைய சம்பவங்கள் சினிமாவில் இருக்கும் அனைவரையும் பாதிக்கிறது. மேலும், நமது படங்களை பாதுகாப்பது எவ்வளவு இன்றியமையாதது என்பதை நினைவூட்டுகிறது. இச்சம்பவத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதிலும், குற்றவாளிகளைத் தண்டிப்பதிலும் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் நாம் உறுதுணையாக நிற்போம். சினிமாவை மதித்து, அதைப் பாதுகாத்திட நம் அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவு அளிப்போம். பைரசிகளை ஒழிப்போம். சினிமாவை காப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.