“தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு மத்திய அரசே காரணம்” - அண்ணாமலை
சென்னை: தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு மத்திய அரசுதான் காரணம். இதனை அமைச்சர் டிஆர்பி ராஜாவால் மறுக்க முடியுமா?. திமுக அமைச்சர்கள் வாய் உள்ளதால் பிழைத்துக் கொள்கிறார்கள்,” என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “மதுரையில் தற்போது இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். அமைச்சர்கள் மூர்த்தியும், பிடிஆர் தியாகராஜனும் மக்கள் மத்தியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். மதுரை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து இருவரும் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
மதுரை மற்றும் கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் தேவை என்பது மக்களின் விருப்பம். இவை இரண்டும் மிகப்பெரிய தொழில் வளர்ச்சி மற்றும் அதிக மக்கள் தொகை வளர்ச்சி இருக்கக் கூடிய நகரங்கள். ஆனால் மாநில அரசு தவறான அறிக்கையை அனுப்பியிருக்கிறது. மத்திய அரசு அனுப்பிய பதில் கடிதத்தையும் தமிழக அரசு மக்கள் மத்தியில் காட்ட வேண்டும்.
அமைச்சர் பிடிஆர், எங்கள் கூட்டணி வேட்பாளர் சுந்தர்.சி-யை பார்த்து ‘வெளியூர் ஆள்’ எனக் குறிப்பிடுகிறார். இவருமே அமெரிக்காவில் தான் படித்தார். அங்கேயே தான் சுற்றித்திரிந்தார். இப்போது மாற்றி மாற்றி பேசி வருகிறார். உள்ளூர் சந்தையிலேயே விலை போகாது திராவிட மாடல் அரசு, இதை வெளியூர் சந்தையில் யாரை வாங்கப் போகிறார்கள்.
தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு மத்திய அரசுதான் காரணம். இதனை அமைச்சர் டிஆர்பி ராஜாவை இல்லை என்று சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம். திமுக அமைச்சர்கள் வாய் உள்ளதால் பிழைத்துக் கொள்கிறார்கள். திமுகவுக்கு எதிரான வாக்கும், நமக்கான வாக்கும் நமக்கு வேண்டும்.
மாணிக்கம் தாகூர் எம்.பி, வேறு வேலை இல்லாமல் என்னை சீண்டிக் கொண்டு இருக்கிறார். முத்துராமலிங்க தேவர் மிகப்பெரிய மேதை. நாங்கள் அனைவரும் அவரை கடவுளாகப் பார்க்கிறோம்.
தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்துக்கு அரசும் அனுமதி தர வேண்டும். காவல்துறையும் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் விஜய்யும் பாதுகாப்புடன் இருக்க வேண்டியது முக்கியம்.
‘ஜனநாயகன்’ திரைப்படம் என்பது நிறைய பேரின் உழைப்பு, வியர்வை, ரத்தம். தற்போது அது லீக் ஆகிவிட்டது. இந்த நேரத்தில் இப்படி நடந்திருகக்கக் கூடாது. இது தவறு. எங்கிருந்து லீக் ஆனது என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தயாரிப்பு நிறுவனத்திற்கு நம்பிக்கை இருந்தால் சிபிஐ நோக்கிகூட போகட்டும். மிக நிச்சயமாக குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட வேண்டும். அதேமசயம் உழைப்பாளிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும். அனைவரும் திரையரங்கில் படத்தைப் பாருங்கள்” இவ்வாறு அவர் பேசினார்.