“தொகுதி மறுவரையறை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம்” - கிரண் ரிஜிஜு
புது டெல்லி: தொகுதி மறுவரையறை மசோதா குறித்து வதந்திகளைப் பரப்புவதை நிறுத்திக்கொள்ளுமாறு எதிர்க்கட்சிகளுக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வேண்டுகோள் விடுத்தார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கிரண் ரிஜிஜு, “எதிர்க்கட்சிகளுக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். தொகுதி மறுவரையறை குறித்து தயவுசெய்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம். தொகுதி மறுவரையறை என்ற சாக்குப்போக்கைக் காட்டி, மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்க்க வேண்டாம். வதந்திகளைப் பரப்பி தென் இந்திய மக்களைத் திசைதிருப்ப வேண்டாம். வேறு சில விவகாரங்களை எழுப்பி இந்த மசோதாவின் நன்மையான நோக்கத்தைத் தவறாகப் புரிந்துகொள்ளவோ அல்லது திரித்துக்கூறவோ வேண்டாம் என்று அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் நான் மிகத் திட்டவட்டமான ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியடைவதற்கு ஏதேனும் ஒரு சாக்குப்போக்கை உருவாக்க வேண்டாம்.இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். மக்களவையிலும் பல்வேறு மாநிலங்களின் சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை இந்திய நாடாளுமன்றம் எடுத்துள்ளதால், இந்த மசோதா என்றென்றும் நினைவுகூரப்படும் ஒரு வரலாற்றுச் சட்ட ஆவணமாகத் திகழும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியடையாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், அனைத்துக் கட்சிகளும் இதற்கு ஆதரவளிப்பார்கள் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன்” என்று அவர் கூறினார்.