பாஜக பஞ்சாயத்து உறுப்பினர் கொலை வழக்கில் கர்நாடக காங். எம்எல்ஏவுக்கு ஆயுள் தண்டனை
பெங்களூரு: கர்நாடக மாநிலம் தார்வாடை சேர்ந்த பாஜக பஞ்சாயத்து உறுப்பினர் யோகேஷ் கவுடா கடந்த 2016-ல் கொலை செய்யப்பட்டார். இதில் அப்போதைய காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்த வினய் குல்கர்னிக்கு தொடர்பு இருப்பதாக பாஜகவினர் குற்றம் சாட்டினர்.
அதன்பின் அவரது பெயர் வழக்கில் சேர்க்கப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் 2 ஆண்டுகள் இவ்வழக்கை விசாரித்த நிலையில் வினய் குல்கர்னி 2022-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 9 மாதங்கள் சிறையில் இருந்த அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து, 2023 தேர்தலில் போட்டியிட்டு வினய் குல்கர்னி எம்எல்ஏ ஆனார். இந்த வழக்கு பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
கடந்த ஆண்டு ஜூனில் வினய் குல்கர்னி மீண்டும் கைது செய்யப்பட்டார். கடந்த 10 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் கஜனன் நேற்று இவ்வழக்கில் தீர்ப்பளித்தார்.
அதில், ‘‘பாஜக பஞ்சாயத்து உறுப்பினர் யோகேஷ் கவுடாவின் அரசியல் வளர்ச்சியை பிடிக்காமல் காங்கிரஸ் எம்எல்ஏ வினய் குல்கர்னி கூலிப்படை மூலம் அவரை கொலை செய்தது தக்க ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. வினய் குல்கர்னிக்கு ஆயுள் தண்டனையும் ரூ.16 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த ரூ.16 லட்சம் கொல்லப்பட்ட யோகேஷ் கவுடாவின் பிள்ளைகளுக்கு வழங்க உத்தரவிடப்படுகிறது. இந்த வழக்கில் விக்ரம் பெல்லாரி, சந்தீப் சவுடத்தி உள்ளிட்ட 16 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது'' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து வினய் குல்கர்னியின் எம்எல்ஏ பதவி பறி போய் உள்ளது. குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 17 பேரும் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.