இணைய சேவையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல புதிய செயற்கைகோளை விண்ணில் செலுத்திய சீனா.!
சிச்சுவான்: சீனா தனது இணைய தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக புதிய செயற்கைகோள் ஒன்றை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உள்ளது. Sichuan மாகாணத்தில் இருந்து லாங்மார்ச் 2டி (Long March-2D) மூலம் ஏவப்பட்ட இந்த செயற்கைகோள், திட்டமிட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சீனா ஏவியுள்ள இந்த புதிய செயற்கைகோள் செல் போன்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் அதிநவீன தொழில்நுட்பத்தை சோதனை செய்ய பயன்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் இணைய வசதி இல்லாத இடங்களிலும் , செயற்கைகோள் மூலம் அதிநவீன இணைய சேவையை வழங்க முடியும் என கூறப்படுகிறது.
இணைய தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் இந்த புதிய சோதனை செயற்கைக்கோளை சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் உள்ள சிச்சாங் செயற்கைக்கோள் ஏவு மையத்திலிருந்து சீனா வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பியது. சமீபத்திய இந்த செயற்கைகோளுடன் சேர்த்து கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் 29 சோதனை செயற்கைக்கோள்கள் சீனாவால் ஏவப்பட்டுள்ளன; 2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் மேலும் ஐந்து சோதனை செயற்கைக்கோள்கள் ஏவப்பட உள்ளதாக கூறப்படுகிறது
தற்போது ஏவப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள்கள், செயற்கைக்கோளிலிருந்து தொலைபேசிக்கு நேரடி பிராட்பேண்ட் ( broadband) இணைப்பு மற்றும் ஸ்பேஸ் - கிரவுண்ட் நெட்வொர்க் இன்டகிரேஷன் உள்ளிட்ட தொழில்நுட்பச் சோதனைகளையும் சரிபார்ப்புகளையும் மேற்கொள்ள முக்கியமாகப் பயன்படுத்தப்படும். இதனிடையே சீனா தற்போது பெய்ஜிங்கிற்கு அருகே, தனது துரிதமாக வளர்ந்து வரும் வணிக விண்வெளித் துறைக்கான ஒரு மையமாகச் செயல்படும் வகையில், ஒரு பிரத்யேக 'துணைக்கோள் நகரத்தை' (Satellite Town) கட்டமைத்து வருகிறது. இது 2026-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது