Select Location
All Locations
State
Region
City / District
வணிக சிலிண்டர் விலை அதிரடி உயர்வு: சிறு, குறு தொழில் நிறுவனங்கள் முடங்கும் அபாயம்

வணிக சிலிண்டர் விலை அதிரடி உயர்வு: சிறு, குறு தொழில் நிறுவனங்கள் முடங்கும் அபாயம்

கோவை: வணிக சிலிண்டர் விலை ஒரே நாளில் 993 ரூபாய் அதிகரித்து, ரூ.3,237 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கோவை சிறு, குறு தொழில்துறையினரை கடுமையாக பாதித்துள்ள நிலையில் நிறுவனங்களை மூடும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்தனர். அமெரிக்​கா- ஈரான் இடையி​லான போர் காரண​மாக இந்​தியா முழு​வதும் சமையல் காஸ் தட்​டுப்​பாடு கடந்த சில மாதங்களாக நிலவி வருகிறது. வணிக சிலிண்​டர்​கள் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்கள் விநியோகத்தில்கடும் தேக்கம் நிலவி வருகிறது. வணிக சமையல் காஸ் கிடைக்​காத​தால், பல உணவகங்கள் 2 மாதங்களுக்கு முன்பே மூடப்பட்டன. சில உணவகங்களில் உணவுத் தயாரிப்பு அளவு குறைப்​பு என எரிபொருள் சிக்கன நடவடிக்கையில் இறங்கின. பல உணவகங்களில் விறகு அடுப்​பு​களை பயன்படுத்தி உணவு தயாரிக்கப்படுகிறது. மேலும் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவங்களும் கோவையில் நடந்தன.

இந்த நிலையில் தற்போது அபரிமிதமான விலையேற்றம் தொழில் துறையினரை பெரும் கவலையில் ஆழ்த்தி உள்ளது. சிறு தேநீர் கடை தொடங்கி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் சங்கத்தின் (டாக்ட்) கோவை மாவட்ட தலைவர் ஜே.ஜேம்ஸ் நேற்று கூறியதாவது: ஈரான் நாட்டின் மீதான போர் காரணமாக ஆரம்பத்தில் வணிக சிலிண்டரின் விலையை சற்று உயர்த்தினர். அப்போதே வெளிச்சந்தையில் சிலிண்டரின் விலை தாறுமாறாக உயர்ந்தது. பலரும் பல மடங்கு விலை கொடுத்து வணிக சிலிண்டரை வெளிச்சந்தையில் பெற்று தொழில் செய்து வந்தனர்.

உணவகங்களிலும் சிலிண்டர் விலை உயர்வை காரணம் காட்டி பொருட்களின் விலை உயர்த்தப்பட்டன. தற்போது அரசே 19 கிலோ வணிக சிலிண்டர் விலையை 993 ரூபாய் உயர்த்தியிருப்பது கோவை தொழில்துறையினரை கடுமையாக பாதித்துள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஏற்கெனவே தொழில் பாதிப்பை சந்திக்க தொடங்கிவிட்ட நிலையில், தற்போது அதிரடியான விலையேற்றத்தின் காரணமாக ரூ.7000 வரை வெளிச்சந்தையில் விற்கப்படும் சிலிண்டர்கள் இனி, ரூ. 10,000 வரை சென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அரசின் விலையேற்றம் என்பதும், வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்க வழிவகுக்கிறது. பலரும் தொழில் செய்ய முடியாமல் தொழில் நிறுவனங்களை மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வணிக சிலிண்டர் விலையேற்றம், தொழில் துறையின் முதுகெலும்பாக இருக்கும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையை அனைத்து மட்டத்திலும் பாதிக்கும்.

விலையேற்றத்தை கட்டுப்படுத்துவதுடன், தடையின்றி சிலிண்டர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இனி இதனை காரணம்காட்டி தேநீர் கடைகள் தொடங்கி அனைத்து உணவகங்களிலும் உணவுப் பொருட்களின் விலையும் நிச்சயம் உயரும். இந்த விலையேற்றம் அனைத்துத் தரப்பினரையும் பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது. சிறு, குறு தொழில்நிறுவனங்களை பொறுத்தமட்டில் வங்கிக்கடன், நிறுவன வாடகை உள்ளிட்டவற்றை சமாளிக்க வேண்டியிருப்பதால், தொழில் துறையில் மீண்டும் ஒரு அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். கோவை ரயில்வே பொருள் உற்பத்தியாளர் நலச்சங்கத்தின் தலைவர் சுருளிவேல் கூறியதாவது: கோவை தொழில்துறை மிக மோசமான கவலை நிலைக்கு சென்றுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் முடியும் வரை காத்திருந்து இந்த விலையேற்றத்தை திட்டமிட்டு செய்துள்ளனர்.

5 கிலோ சிலிண்டர் தொடங்கி 19 கிலோ சிலிண்டர் வரை பல மடங்கு விலையை உயர்த்தியிருப்பதால் கோவையில் உள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் விழி பிதுங்கி நிற்கின்றன. அடுத்து என்னசெய்வதென்று தெரியாத நிலையில் தத்தளிக்கின்றன. வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகம் பணிபுரியும் தொழில் நிறுவனங்களில் வணிக காஸ் மூலம் தான் உணவு சமைக்கப்படுகிறது. இனி அது தடை பட்டால் இயல்பாகவே வேலைக்கு வருவது தடைபடும். வேலைக்கு வருவது தடைபடும்போது உற்பத்தி பாதிக்கும். அடுத்ததாக ஊதியத்தை உயர்த்தி கேட்பார்கள். இப்படி பல சங்கிலிகள் அறுபடுகின்றன. சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வணிக காஸ் சிலிண்டர் மிகவும் அத்தியாவசியமான ஒன்று. இந்த விலையேற்றத்தின் மூலம் தொழில்துறை முற்றிலும் முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது, என்றார்.


Hindu Tamil 1 hour ago
Home Flash News