தமிழக கோ-ஆப்டெக்ஸில் இருந்து ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்கள்: திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் கூட்டத்தில் முடிவு
திருமலை: தமிழ்நாட்டின் கோ - ஆப் டெக்ஸில் இருந்து திருப்பதி ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்கள் வாங்க திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று அறங்காவலர் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் 86 அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறங்காவலர் குழுத்தலைவர் பிஆர் நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருமலையில் தண்ணீர் வீணாவதை தடுக்கும் விதமாக கோகர்பம் அணையில் இருந்து ஃபில்டர் பாயின்ட் வரை 2 கி.மீ தூரத்துக்கு ரூ.6 கோடி செலவில் பைப் லைன் அமைக்கப்படும். ஆப்கோ மற்றும் கோ ஆப்டெக்ஸ் மூலம் பட்டு வஸ்திரங்கள், போர்வைகள் ஆகியவற்றை ரூ.44.20 கோடிக்கு வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவை பேரூர் தாலுகா செட்டிபாளையம் பகுதியில் ஜி-ஸ்கொயர் ரியல்டர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தார் திருப்பதி தேவஸ்தானத்துக்கு 19.43 ஏக்கர் நிலத்தை பத்திரப் பதிவு செய்து கொடுத்துள்ளனர். இதனை தேவஸ்தான அசையா சொத்துகள் பதிவேட்டில் சேர்க்க அறங்காவலர் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் பத்மாவதி தாயார் கோயில் கட்ட தேவையான நிதியை அளிக்க அறங்காவலர் குழு உறுப்பினர் சவுரப் போரா முன்வந்துள்ளார். திருப்பதி அலிபிரியில் ரூ.4.75 கோடி செலவில் நிரந்தர யாக சாலை அமைக்கப்படும். திருமலையில் உள்ள சாலைகள், சர்க்கிள்களுக்கு சுவாமி பெயர்கள் சூட்டப்படும். இவ்வாறு பிஆர் நாயுடு கூறினார். இக்கூட்டத்தில் நிர்வாக அதிகாரி எம்.ரவிச்சந்திரா, கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சவுத்ரி மற்றும் தேவஸ்தான உயர் அதிகாரிகள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.