10 நாள்களில் 3-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு!
கடந்த பத்து நாள்களில் மூன்றாவது முறையாக சனிக்கிழமை (மே 23) பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான போர் காரணமாக உலகளவில் எரிவாயு விநியோகம் அதிகமாக பாதிப்படைந்துள்ளது.
உலகளவில் முக்கிய எண்ணெய் வழிப்போக்குவரத்தான ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதன் விளைவாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகள் பெரிதளவில் பாதிப்படைந்து விலைவாசி உயர்வை எதிர்கொண்டுள்ளன. கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து, 4 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில், கடந்த மே 15 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த மே 19 ஆம் தேதி இரண்டாவது முறையாக பெட்ரோல் லிட்டருக்கு 87 காசுகளும், டீசல் லிட்டருக்கு 91 காசுகளும் அதிகரித்தன.
தற்போது மூன்றாவது முறையாக பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 23) மீண்டும் உயர்ந்துள்ளன. அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 82 காசுகள் உயர்ந்து ரூ. 105.31 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 87 காசுகள் உயர்ந்து ரூ. 96.98 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. நாட்டின் தலைநகர் தில்லியில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 87 காசுகள் உயர்ந்து, ரூ.99.51 ஆகவும், டீசல் விலை 91 காசுகள் உயர்ந்து ரூ.92.49 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.