Minister Ramesh: திருச்செந்தூரில் அடாவடி..! அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் - கொத்தாக சிக்கிய கும்பல்
Minister Ramesh: திருச்செந்தூரில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்ட அர்ச்சகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
அமைச்சரிடமே ரூ.4,000 லஞ்சம்
இந்து சமய அறநிலைய அமைச்சராக ரமேஷ் பொறுப்பேற்றது முதலே, மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களில் அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் மற்றும் அர்ச்சனை என பல்வேறு வடிவங்களில் பக்தர்களிடமிருந்து பணம் பறிக்கப்படுவதாக நீண்ட காலமாக பல புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இதையறிந்து பொதுமக்களில் ஒருவராக சாதாரண உடையணிந்து அமைச்சர் ரமேஷ் கோயிலுக்கு சென்றுள்ளார். உடன் அதிகாரிகள் யாரையும் அவர் அழைத்துச் செல்லாமல், உதவியாளர் உடன் மட்டும் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அமைச்சரை அடையாளம் தெரியாமல் அவரது உதவியாளரை அணுகிய அர்ச்சகரில் ஒருவர், நான்காயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் விரைவு தரிசனத்திற்கு அழைத்துச் செல்வதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து, அவருடன் தொடர்புடைய அனைவரையும் கூண்டோடு பிடிப்பதற்காக அமைச்சரும் ஜி-பே மூலம் பணத்தை செலுத்தி விரைவு தரிசனத்திற்காக சென்றுள்ளார். அப்போது பணம் பெற்ற அர்ச்சகர் மற்றும் அவருடன் தொடர்புடைய அனைவரையும் கையுள் களவுமாக பிடித்துள்ளார். மேலும், கைப்பட மன்னிப்பு கடிதமும் எழுதி வாங்கியுள்ளார். மேலும் அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணையை முடுக்கி விடவும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளாராம்.
அதிகாரிகளிடமும் அமைச்சர் விசாரணை:
அர்ச்சகர்களை தொடர்ந்து திருச்செந்தூர் கோயிலில் உள்ள நிர்வாக அலுவலகத்திலும் அமைச்சர் ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார். பின்பு அங்கு பணியாற்றி வரும் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரையும் வரவழைத்து விசாரணை நடத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளாராம். இதற்காக கோயில் ஊழியர்கள் அனைவரையும் அங்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளாராம். இதன் மூலம் நீண்டகாலமாக பொதுமக்கள் முன்வைத்து வந்த குற்றச்சாட்டுகள் தற்போது நிரூபனமாகியுள்ளது. இத்தகைய பணம் பறிப்பு நடவடிக்கைகள் எதிர்காலத்தில் நிகழாமல் இருப்பதை தடுக்க, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.