Select Location
All Locations
State
Region
City / District
பழைய குற்றால அருவியில் குளிக்க கட்டணம் இல்லை..!

பழைய குற்றால அருவியில் குளிக்க கட்டணம் இல்லை..!

தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர், மாவட்ட வன அலுவலர் ஆர். ராஜ்மோகன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் ஆகியோர் உள்ளாட்சி மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து நேற்று பழைய குற்றாலம் அருவிப் பகுதியில் விரிவான ஆய்வு மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, அருவியை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.

பழைய குற்றாலம் பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளதால் சமீபத்தில் வனத்துறை தனது கட்டுப்பாட்டின் கீழ் பழைய குற்றாலம் அருவியை கொண்டு வந்தது. மேலும் அருவியில் குளிப்பதற்கு பல ஆண்டுகளாக பொதுமக்கள் இலவசமாக சென்று வந்த நிலையில், திடீரென குளிப்பதற்கு நபர் ஒருவருக்கு இருபது ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என வனத்துறை உத்தரவிட்டிருந்தது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், குளிப்பதற்கு விதிக்கப்பட்ட 20 ரூபாய் கட்டணத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அதே சமயம் எதிர்காலத்தில் தமிழ்நாடு சூழல் சுற்றுலா வழிகாட்டுதல்களின்படி நுழைவு கட்டணம் வசூலிப்பது குறித்து அரசு முடிவெடுக்கும்.

அதுவரை, தற்போது தற்காலிகமாக பொதுமக்களிடம் எந்தவித நுழைவு கட்டணமும் வசூலிக்கப்படாது என வனத்துறை தெளிவுபடுத்தியுள்ளது. இதனிடையே பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு, காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே சுற்றுலாப் பயணிகள் அருவிப் பகுதிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் உயர்நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றி அருவிப் பகுதியில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் அருவிப் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குளிக்கும் போது சோப்பு, ஷாம்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது, தீப்பற்றக்கூடிய பொருட்கள், மதுபானங்களை வனப்பகுதிக்குள் கொண்டு வர முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


Smacy News 54 minutes ago
Home Flash News