அரசு வழக்கு நடத்துநர் பதவி தேர்வர்கள் சரியான சான்றிதழை பதிவேற்றம் செய்ய கால அவகாசம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஸ்ரீவெங்கட பிரியா வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் குற்ற வழக்கு தொடர்வு துறையில் உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர் (கிரேடு 2) பதவிக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கு தேர்வர்களால் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டதில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்னர் சில தேர்வர்கள் உரிய சான்றிதழ்களை சில குறைபாடுகளுடன், சரியாக பதிவேற்றம் செய்யப்படாமலும், முதன்மை தேர்வுக் கட்டணம் செலுத்தப்படாமலும் (தேவைப்படின்) உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இத்தகைய தேர்வர்களுக்கு இறுதிவாய்ப்பு வழங்கும் விதமாக வருகிற 8ம் தேதி இரவு 11.59 மணி வரை விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை மறுபதிவேற்றம் செய்யவும், தேர்வுக் கட்டணம் செலுத்தவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. மேற்படி தேர்வர்களின் பதிவெண்களைக் கொண்ட பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்தகவல் தேர்வர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மற்றும் குறிப்பாணை மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் அனைவரும் குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் ஒருமுறைப் பதிவு தளம் வாயிலாக பதிவேற்றம் செய்யவும், தேர்வுக் கட்டணம் செலுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.