Select Location
All Locations
State
Region
City / District
பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும்: முதல்வர் விஜய் உத்தரவு

பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும்: முதல்வர் விஜய் உத்தரவு

சென்னை: பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது. தென்மேற்குப் பருவமழை மே 16, 2026 அன்று முதல் தென் அந்தமான் கடல், நிக்கோபார் தீவுகளில் பெய்து வருகிறது. பருவமழை மேலும் தீவிரமடைவதற்கு ஏற்ற சூழல் தொடர்ந்து நிலவி வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று முதல் தென்மேற்குப் பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. இக்கூட்டத்தில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பின்படி, இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் தமிழ்நாட்டில் மழைப்பொழிவு இயல்பைவிட குறைவாகப் பெய்ய 80 சதவீதம் வாய்ப்புள்ள நிலையில், சம்மந்தப்பட்ட துறைச் செயலாளர்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்கள், தென்மேற்குப் பருவமழையை எதிர்கொள்ள மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் அவர்களிடம் எடுத்துரைத்தனர்.

மேலும், இக்கூட்டத்தில் எந்தவொரு பேரிடர் சூழலையும் எதிர்கொள்ள அனைத்துத் துறையினரும் மற்றும் மாவட்ட நிர்வாகமும் தயார் நிலையில் இருப்பது மிகவும் அவசியம் என்றும், பேரிடர்க் காலங்களில் உயிர் சேதத்தைத் தவிர்ப்பது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என்றும், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட அவசர கால செயல்பாட்டு மையம் 24x7 செயல்பட வேண்டும் என்றும், மீட்பு உபகரணங்கள், முதல்நிலை மீட்பாளர்கள் மற்றும் மீட்புப் படையினர் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், தேவைப்படும் இடங்களில் மீட்புப் படையினர் முன்னரே நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், நிவாரண மையங்களை தயார் நிலையில் வைத்திருப்பதோடு, அம்மையங்களில் மக்களைத் தங்க வைக்க வேண்டிய சூழல்களில் அவற்றைத் தூய்மையாக வைத்திருப்பதுடன், மின்சாரம், தேவையான உணவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் உறுதி செய்திட வேண்டுமென்றும், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் மழைநீர்த் தேக்கம், சாலைகளில் மரங்கள் விழுதல் போன்ற மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பருவமழைக் காலங்களில் ஏற்படும் நோய்த்தொற்றுகளுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை ஊரக வளர்ச்சித் துறையினர், நகராட்சி நிர்வாகத் துறையினர் மற்றும் மருத்துவத்துறையினர் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அறுந்து விழக்கூடிய நிலையில் உள்ள மின் கம்பிகள், பலவீனமான மின் கம்பங்கள், மின் கோபுரங்களை உடனடியாக மின்துறையினர் சீரமைக்க வேண்டுமென்றும், மழைக்காலங்களில் மின் கம்பிகள் அறுந்துள்ளதாகத் தகவல் கிடைக்கப்பெறும் சூழல்களில் உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

 தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை காலங்களில் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில், நீர்நிலைகளைத் தூர்வாரும் பணிகள், ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் போன்றவற்றை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும், வடகிழக்குப் பருவமழை தொடங்க சுமார் நான்கு மாத காலங்கள் இருப்பதால், அதற்குள் அனைத்து முன்னேற்பாட்டுப் பணிகளையும் நிறைவு செய்து, எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில், அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் மு. சாய்குமார், கூடுதல் தலைமைச் செயலாளர் /வருவாய் நிருவாக ஆணையர் நா. முருகானந்தம், கூடுதல் தலைமைச் செயலாளர்/ தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் ஜெ. ராதாகிருஷ்ணன், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க. மணிவாசன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எம்.ஏ. சித்திக், நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர் சத்யபிரத சாகு, காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் சீமா அகர்வால், பேரிடர் மேலாண்மை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைச் செயலாளர் கே.எஸ். பழனிசாமி, வேளாண்மை உழவர் நலத்துறை செயலாளர் பொ. சங்கர், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். மேலும், இக்கூட்டத்தில் காணொலிக் காட்சி வாயிலாக நீலகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருப்பூர், கோயம்புத்தூர், கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர்.


Dinakaran 1 hour ago
Home Flash News