Select Location
All Locations
State
Region
City / District
'கீர்த்தி சக்ரா' பெற்ற ராணுவ வீரரை பாராட்டிய முதல்வர் விஜய் - அரசு சார்பில் ரூ.48 லட்சம் வழங்கினார்

'கீர்த்தி சக்ரா' பெற்ற ராணுவ வீரரை பாராட்டிய முதல்வர் விஜய் - அரசு சார்பில் ரூ.48 லட்சம் வழங்கினார்

சென்னை: “கீர்த்தி சக்ரா” விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரத்தின் அசாத்திய வீரத்தைப் பாராட்டி தமிழக அரசின் சார்பில் ரூ.48 லட்சத்திற்கான காசோலையை தமிழக முதல்வர் விஜய் வழங்கினார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: "தமிழக முதல்வர் விஜய் இன்று (ஜூன் 15) தலைமைச் செயலகத்தில், இந்திய அரசின் “கீர்த்தி சக்ரா” விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரத்துக்கு பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் வெளிப்படுத்திய அசாத்திய வீர தீரச் செயலைப் பாராட்டி தமிழக அரசின் சார்பில் 48 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

பல்வேறு வீர தீரச் செயல்களுக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த பாதுகாப்புப் படை வீரர்கள் விருதுகளைப் பெறுகின்றபோது, அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தமிழக அரசு ராணுவ வீரர் பெற்ற விருதுகளுக்கேற்ப ரொக்கப் பரிசு வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அவ்வகையில், உயரிய விருதான “கீர்த்தி சக்ரா” விருது பெற்ற ராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரத்துக்கு, தமிழக முதல்வர் தமிழக அரசின் சார்பில் 48 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி, தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்வில், மனித வள மேலாண்மைத் துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் சரத்குமார், தலைமைச் செயலாளர் முனைவர் சாய்குமார், பொதுத்துறை முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், பொதுத் துறை சிறப்புச் செயலாளர் மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை இயக்குநர் சுந்தரவல்லி, முன்னாள் படை வீரர் நலத்துறை இணை இயக்குநர் மேஜர் சுரேஷ், ராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம், அவரது குடும்பத்தினர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Hindu Tamil 1 hour ago
Home Flash News