Select Location
All Locations
State
Region
City / District
“அன்று ராம பக்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு; இன்று இந்து மத பாதுகாவலர்கள் போல் பேச்சு” - சமாஜ்வாதி, காங். மீது யோகி தாக்கு

“அன்று ராம பக்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு; இன்று இந்து மத பாதுகாவலர்கள் போல் பேச்சு” - சமாஜ்வாதி, காங். மீது யோகி தாக்கு

லக்னோ: “அன்று ராம பக்தர்களை துப்பாக்கியால் சுட்டவர்கள் எல்லாம் இன்று மத நம்பிக்கை பற்றிப் பேசுகிறார்கள்,” என்று ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரத்தில் கேள்வி கேட்கும் சமாஜ்வாதி கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். 1990 அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 2 தேதிகளில் அயோத்தி இயக்கம் சார்பில் பாபர் மசூதி நோக்கி கரசேவர்கர்கள் மேற்கொண்ட பேரணியின்போது அவர்கள் மீது அப்போதைய சமாஜ்வாதி கட்சி துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் 17 பேர் உயிரிழந்தனர். அந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய யோகி ஆதித்யநாத் சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சிகள் தற்போது ராமர் கோயில் காணிக்கை விவகாரத்தை கையில் எடுத்துள்ளதை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

இது குறித்துப் பேசிய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், “ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரம் ராம பக்தர்களின் உணர்வை பாதித்துள்ளது. ஆனால், அரசு இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ராமர் கோயில் அறக்கட்டளை ஒரு சுயாதீன அமைப்பு. அதன் நிர்வாகத்தில் அரசு தலையிடுவது இல்லை. ஆனாலும் காணிக்கை திருட்டு தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்தவுடனேயே நியாயமான நேர்மையான விசாரணைக்கு உத்தரவிட்டோம். காணிக்கை திருட்டு குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு உதவியவர்களும் காவலில் எடுக்கப்பட்டனர். ஆட்சியில் இருந்தபோது மத நம்பிக்கையை எதிர்த்தவர்கள், கர சேவகர்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் இன்று இந்து மதத்தின் காவலர்களைப் போல செயல்படுகிறார்கள். ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரத்தை பிரதானப் பிரச்சினையாக்க முயல்கிறார்கள். அவர்கள் ஆட்சியில் இருந்தபோது நடந்த ஊழல்கள், குற்றங்களை மறைக்க திட்டமிடுகிறார்கள்.

ராமர் கோயில் கட்டுமானத்தைத் தடுத்தார்கள், இன்னும் பிற இடங்களில் இந்து கோயில்கள் உரிமை மீட்பிலும் பிரச்சினை செய்கிறார்கள். சமாஜ்வாதி கட்சியும், காங்கிரஸும் காலங்காலமாகவே இந்து மத நம்பிக்கையை மதிக்கவில்லை. அயோத்தி அனுமன் கோயிலில் முஸ்லிம்கள் நமாஸுக்கு அனுமதித்தனர். நீங்கள் உண்மையிலேயே மதச்சார்பற்றவர் என்றால், மசூதியில் அனுமன் சாலீஸா முழங்கவும் அனுமதித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நடந்ததா? எல்லாம் ஒருவழி போக்காகவே இருந்தது. பாஜக ஆட்சியில் உ.பி.யில் அயோத்தி மத ரீதியான பெருமையை மீட்டெடுத்ததோடு பொருளாதார வளர்ச்சியும் கண்டுள்ளது. அயோத்தி நகர வளர்ச்சி உ.பி.க்கு முன்மாதிரி” என்று பேசியிருக்கிறார்.


Hindu Tamil 1 hour ago
Home Flash News