அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
Actress Jyothika : நீட் (NEET) தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சி நடத்தி வரும் போராட்டத்திற்கு நடிகை ஜோதிகா ஆதரவு தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு- எதிர்க்கும் மாணவர்கள்
மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு கட்டாயம் என்ற உத்தரவால் ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக்கனியாக மாறியது. மேலும் நீட் தேர்வு அச்சம் காரணமாக ஏராளமான மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகளும் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நீட் தேர்வு வினாத்தாள்கள் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், மறு தேர்வை மத்திய அரசு நடத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர்.
போராட்டத்தில் மாணவர்கள்
அந்த வகையிர், நீட் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் மற்றும் மதிப்பெண் குளறுபடிகளால் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒன்றுதிரண்டு காக்ரோச் ஜனதா கட்சி தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி,காக்ரோச் ஜனதா கட்சி , மாணவர்களும் முன்னெடுத்து வரும் போராட்டத்திற்குப் நடிகை ஜோதிகா தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு ஆதரவாக ஜோதிகா
இது குறித்துப் பதிவிட்டுள்ள அவர், நாட்டின் எதிர்காலமான மாணவர்களின் உரிமைகளுக்காகவும், கல்வி அமைப்பில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும் குரல் கொடுத்துள்ளார். "நான் மாணவர்களுடனும் நமது தேசத்தின் எதிர்காலத்துடனும் நிற்கிறேன்! பொறுப்புக்கூறல், ஜனநாயகம் மற்றும் சீர்திருத்தப்பட்ட கல்விக்காக எனது குரல் என்றும் ஒலிக்கும்" , மத்திய கல்வி அமைச்சர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். மேலும், இப்போராட்டத்தை முன்னெடுத்து வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், CJP அமைப்பின் அபிஜித் திப்கே மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோரின் துணிச்சலான செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், "ஒரு தாயாக, எங்கள் பிள்ளைகளும் உங்களைப் போல அச்சமின்றியும், நேர்மையாகவும் வளர வேண்டும் என்று விரும்புகிறோம். உண்மையை எந்த ஒளிவுமறைவுமின்றிப் பேசும் இந்த Gen Z இளைஞர்களைக் குறித்து நாங்கள் பெருமை கொள்கிறோம்" எனத் தாய்மார்களின் சார்பில் தனது நெகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்
Gen Z இளைஞர்கள் - பெருமை கொள்கிறோம்
மாணவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்று அச்சத்தைப் போக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், "ஒன்றாக இணைந்து 'நாம்' தான் இந்தியா என்பதை இந்த இளைஞர்கள் நிரூபித்துள்ளனர்" எனக் கூறித் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வுக்கு எதிராக CJP அமைப்பினரும் ஆயிரக்கணக்கான மாணவர்களும் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், நடிகை ஜோதிகாவின் இந்த ஆதரவு பதிவு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.