ஒரே இடத்தில் இவ்வளவு அசிங்கத்தைப் பார்த்ததில்லை: மாணவர்களை விமர்சித்த கங்கனா!
தில்லியில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தை கங்கனா ரணாவத் கடுமையாக விமர்சித்துள்ளார். தில்லியில் சமீபத்தில் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (சிஜேபி) தலைமையில் மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, பிற தேர்வுகளில் குளறுபடிகள் போன்றவற்றை எதிர்த்து அவர்கள் நடத்திய போராட்டத்தின் காரணமாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை வாபஸ் வாங்கினர். இந்த நிலையில், போராட்டத்தில் பங்கேற்றவர்களை நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரணாவத் கடுமையான விமர்சித்துள்ளார்.
போராட்டத்தின்போது அவர்களால் எடுக்கப்பட்ட வைரல் விடியோக்களைப் பார்க்கையில், "குமட்டல் உணர்வு" ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், போராட்டக்காரர்களை அருவருப்பானவர்கள் என்றும் பதிவிட்டுள்ளார். கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “என் வாழ்க்கையில் ஒரே இடத்தில் இவ்வளவு அசிங்கத்தை நான் பார்த்தது இல்லை. ஜென் ஸீ போராட்டங்கள் தொடர்பான ரீல்ஸ்கள் குமட்டல் வருகின்றது. அவர்கள் பேசும் விதம், பயன்படுத்தும் மொழி என என் வாழ்க்கையில் இதுவரை ஒவ்வொரு ஃபிரேமிலும் இவ்வளவு உறுத்தலாகவும், அநாகரிகமாகவும் இருப்பவர்களை நான் பார்த்ததில்லை. இவர்களை யார் பெற்றெடுத்து வளர்க்கின்றனர்?
இந்தியா நேர்த்தியான, கலாச்சார நுட்பங்கள் வேரூன்றிய, பலதரப்பட்ட அழகான மக்கள் வாழும் இடம். ஆனால், நீங்களோ உங்களைக் கரப்பான் பூச்சிகள் என்று சொல்லிக்கொள்கிறீர்கள். உங்களைப் பார்ப்பதற்கும, நீங்கள் நடந்து கொள்வதும்கூட அவற்றைப் போன்றே உள்ளது. உங்கள் அழுக்கு, குப்பை மற்றும் அசிங்கத்தை இந்த உலகின் மீது நீங்கள் திணிக்கிறீர்கள். இந்த ரீல்ஸ்களால் நான் மனதளவில் சோர்வடைந்துள்ளேன். இவர்களால், டிஜிட்டல் உலகில் இருந்து வெளியேறி இளைப்பாற விரும்புகிறேன்.