அமித் ஷா தலைமையில் தென்மண்டல கவுன்சில் கூட்டம்: முக்கியத்துவம் என்ன?
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், தென் மண்டலக் குழுவின் 31-வது கூட்டம், இன்று (ஆகஸ்ட் 20) மகாபலிபுரத்தில் நடைபெறவுள்ளது. இந்த தென் மண்டலக் குழுவில், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளம், தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்களும், புதுச்சேரி, அந்தமான் & நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களும் உறுப்பினர்களாக உள்ளன.
இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம், 1956-ன் பிரிவு 15 முதல் 22 வரையிலான விதிமுறைகளின் கீழ், தென் மண்டலக் குழு உட்பட ஐந்து மண்டலக் குழு அமைக்கப்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான அமித் ஷா தென் மண்டலக் குழுவின் தலைவராகவும், தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் துணைத் தலைவராகவும் உள்ளனர். இந்தக் குழுக்களில், உறுப்பு மாநிலங்களின் முதலமைச்சர்கள் சுழற்சி முறையில், அதன் துணைத் தலைவராகப் பணியாற்றுகின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மாநிலங்களுக்கு இடையேயான குழுச் செயலகம் ஏற்பாடு செய்துள்ள இந்தக் கூட்டத்தைத் தமிழ்நாடு மாநில அரசு நடத்துகிறது. நாட்டின் தென்பகுதியில் உள்ள உறுப்பு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் / துணைநிலை ஆளுநர்கள் / நிர்வாகிகள், ஒவ்வொரு மாநிலம், யூனியன் பிரதேசங்களிலிருந்தும் தலா இரண்டு அமைச்சர்கள், மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள் / ஆலோசகர்கள், பிற உயர் அதிகாரிகள், மத்திய அரசின் உயர் அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
இந்த மண்டலக் குழுவில் அந்தந்த மாநிலத் தலைமைச் செயலாளர்கள் நிலையில் தலா ஒரு நிலைக்குழுவையும் அமைத்துள்ளது. மாநில அரசுகளால் முன்வைக்கப்படும் விவகாரங்கள், மண்டலக் குழுவால் அமைக்கப்பட்டுள்ள நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு, ஆலோசிக்கப்படுகின்றன. எஞ்சிய விவகாரங்கள் மண்டலக் குழுவின் கூட்டத்தில் பரிசீலனைக்காக முன் வைக்கப்படுகின்றன.