இந்திய குடியுரிமைக்காக ஊடுருவல்காரர்கள் ஆதார் மோசடி: ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
மும்பை: ஆப்கானிஸ்தானை சேர்ந்த மஜித் கான் ஷா என்பவரின் அடையாளத் தகவல்கள் மற்றும் அங்கீகாரப் பதிவுகளை வெளியிடுமாறு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி மகாராஷ்டிரா அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை மும்பை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.எஸ் கட்கரி மற்றும் கமல் கட்டா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமர்வானது, இந்திய குடியுரிமையைக் கோருவதற்காக வெளிநாட்டினர் எல்லை வழியாக ஊடுருவி, ஆதார், பான் அட்டை போன்ற ஆவணங்களை மோசடியாக பெறும் கவலைக்குரிய போக்கை உயர்நீதிமன்றம் கவனித்துள்ளது.
இந்த போக்கு பல்வேறு முகமைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் ஆவணச் சரிபார்ப்பில் உள்ள தீவிரமான குறைபாட்டை அடிக்கோடிட்டு காட்டுகின்றது. சில சந்தர்பங்களில் அத்தகைய நபர்கள் தேசவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர். அத்தகைய நபர்களை கண்டறிந்து முன்னுரிமை அளிக்க வேண்டியது அவசியமாகும். மேலும் இந்த பிரச்னையை தீர்ப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.