நேபாள துயரம்: உயிரிழப்பு 626 ஆக அதிகரிப்பு - 2,426 பேரை தேடும் பணி தீவிரம்
காத்மாண்டு: நேபாள வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 626 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுவரை 2,426 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் அது கூறியுள்ளது. நேபாளத்தில் கடந்த 26-ம் தேதி லாங்டாங் லிருங் பனிச்சிகரத்தில் சுமார் 1.5 கி.மீ. அகலம் கொண்ட பனிமலை உடைந்து ஏரியில் விழுந்ததில், ஏரி உடைந்து சீனாவின் திபெத் பகுதி மற்றும் நேபாளத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக, நேபாளத்தின் போடேகோசி, திரிசூலி நதிகளில் பல மீட்டர் உயரத்துக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கரையோர கட்டிடங்கள் பல வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ள பாதிப்பு தொடர்பாக நேபாள உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய பேரிடர் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் 626 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
2,426 பேரின் நிலை குறித்து இதுவரை தகவல் இல்லை. அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இவர்களில், 517 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். மருத்துவமனைகளில் 101 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் 15,224 பாதுகாப்புப் பணிாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இதில், நேபாள காவல்துறையைச் சேர்ந்த 4,811 பேரும், நேபாள ராணுவத்தைச் சேர்ந்த 6,755 பேரும், நேபாள ஆயுதக் காவல் படையைச் சேர்ந்த 3,658 பேரும் அடங்குவர். இதுவரை 4,451 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதில், 191 பேர் சுரங்கப்பாதையில் இருந்தும், 517 பேர் வான்வழியாகவும் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளில் ராணுவம் மற்றும் தனியாருக்குச் சொந்தமான 16 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தகவல் தொடர்பு கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன. 198 தொலைபேசி கோபுரங்கள் சேதமடைந்த நிலையில், அவற்றில் 145 பழுதுபார்க்கப்பட்டுள்ளன. தற்போது அவை செயல்பாட்டில் உள்ளன.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.