அடுத்த பிரதமர் என வடமாநிலங்களில் பிரச்சாரம் நடக்கும் நிலையில் முதல்வர் விஜய் பெயரில் மபியில் மெகா மோசடி: தொழில் தொடங்க நிதி தருவதாக பணம் வசூலித்து ஏமாற்றிவிட்டதாக போலீசில் புகார்
இந்தூர்: தமிழக முதல்வர் விஜய்யை ‘அடுத்த பிரதமர்’ என்று முன்னிறுத்தி வடமாநிலங்களைச் சேர்ந்த சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்கள் மூலம் சமீபகாலமாக ரீல்ஸ்கள் வெளியிடப்பட்டு தொடர் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில், முதல்வர் விஜய்யின் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் நூதன மோசடி அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், தமிழக முதல்வர் விஜய் நடத்தும் தொண்டு நிறுவனத்தில் இருந்து பேசுவதாகக் கூறி பொதுமக்களிடம் மர்ம நபர்கள் பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இது தொடர்பாக 6 புகார்கள் பதிவாகியுள்ளதாக இந்தூர் போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த மோசடி குறித்து இந்தூர் குற்றப்பிரிவு கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் ராஜேஷ் தண்டோடியா கூறுகையில், ‘‘முதல்வர் விஜய்யின் தொண்டு நிறுவனத்தில் இருந்து பேசுவதாகக் கூறி பொதுமக்களை செல்போனில் தொடர்பு கொள்ளும் மோசடிக் கும்பல், ஏழைகளுக்கு நிதி உதவி மற்றும் சிறு தொழில்கள் அல்லது ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம் தொடங்குவதற்கான நிதி வழங்கப்படுவதாக ஆசை வார்த்தை கூறுகின்றனர்.