3 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4.3.2026 அன்று தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் 9 கோடியே 31 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டுமானத் தொழிலாளர்களுக்காக சென்னை, மதுரை. கோயம்புத்தூர் உட்பட 23 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள உழைப்பாளர் நலக்கூடங்கள், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் எழிச்சூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் - தையூரில் உள்ள தங்குமிடங்களில் 66 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள முதியோர் இல்லங்கள். 6 கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள செய்யாறு அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கான புதிய கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்து, 27 கோடியே 92 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 3 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையக் கட்டடங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு அரசால் கட்டுமானத் தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் காக்க தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் தோற்றுவிக்கப்பட்டது. இதன் மூலமாக தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு கல்வி. திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம், விபத்து ஊனம், இயற்கை மரணம். தனிநபர் விபத்து மரணம், பணியிடத்தில் விபத்து மரணம், வீட்டு வசதி நலத் திட்ட உதவித் தொகை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வரசு பொறுப்பேற்ற இந்த ஐந்து ஆண்டுகளில், 37.75 இலட்சம் பதிவு பெற்ற அமைப்புசாரா மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 3,317.16 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.