இந்தியாவில் அவசர கால தேவைக்காக கச்சா எண்ணெய் சேமிக்க பூமிக்கடியில் 3 குகைகள்!
புதுடெல்லி: அவசர கால தேவைக்கு பயன்படுத்தும் வகையில் பூமிக்கடியில் 3 ரகசிய குகைகளில் மத்திய அரசு கச்சா எண்ணெயை சேமித்து வைத்துள்ளது.
அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுப்படை மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக உலக நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் போர் போன்ற அவசர காலங்களில், திடீர் தேவை ஏற்பட்டாலோ, கச்சா எண்ணெய் சப்ளை செய்யும் நிறுவனங்கள் நிறுத்திக் கொண்டாலோ அவசர தேவைக்கு பல லட்சம் டன்கள் கச்சா எண்ணெயை பூமிக்கடியில் சேமித்து வைக்கும் பணியை மத்திய அரசு பல ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தது. ஆந்திராவில் விசாகப்பட்டினம், கர்நாடகாவில் மங்களூரு, படூர் என தென்னிந்தியாவில் 3 இடங்களில் ரூ.4,100 கோடி செலவில் இதற்காக பூமிக்கடியில் குகைகள் அமைக்கப்பட்டன. இவற்றில் மிகப் பழமையானது விசாகப்பட்டினத்தில் உள்ளது.
இதனை பெட்ரோலிய இருப்புகளை பராமரிக்கும் இந்திய பொதுத்துறை நிறுவனமான ஐஎஸ்பிஆர் 10 ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தியது.
இந்த மூன்று குகைகளும் மொத்தம் 5.33 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை (40 மில்லியன் பீப்பாய்கள்) வைத்திருக்க முடியும். இது சுமார் 10 நாட்களுக்கு நம் நாட்டின் தேவையை பூர்த்தி செய்யக் கூடியது. வெளிப்புற தாக்குதல்கள் அல்லது ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்படாத வகையில் கச்சா எண்ணெயை இங்கு பாதுகாப்பாக சேமித்து வைக்க முடியும்.
பராமரிப்பு செலவும் குறைவாக இருக்கும். பூமிக்கு அடியில் ஆழமாக இடத்தில் சேமிப்பு கிடங்கு இருப்பதால் தீ விபத்து, எண்ணெய்க் கசிவு போன்ற அபாயங்களும் குறைவாக இருக்கும். மத்திய அரசு இந்த இருப்புகளை இன்னும் பயன்படுத்தவில்லை. தேவைப்படும்போது இதை பயன்படுத்தும். மாற்று ஏற்பாடுகளுக்கான கால அவகாசத்தை மத்திய அரசுக்கு இந்த இருப்பு வழங்கும்.